திமுகவுக்கு அறிவு இல்லை.. அதான் பிகேயை.. எச்.ராஜா அலேக் பேச்சு.. அப்ப பாஜக எதுக்கு கூப்பிட்டுச்சாம்!
மதுரை: திமுகவுக்கு தேர்தலில் வியூகம் வகுக்கும் அளவுக்கு அறிவில்லாததால் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரை அழைத்து வந்துள்ளது என பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா தெரிவித்துள்ளார்.
ஆனால் அதே வேளை கடந்த 2014ஆம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சிக்கு வரவும் மோடி பிரதமராகவும் பிரசாந்த் கிஷோர்தான் ஆலோசகராக செயல்பட்டார் என்பதை எச் ராஜா மறந்துவிட்டார் போலும்!
மதுரை கே கே நகரில் பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் திமுகவும் அதனுடைய இலவச இணைப்புகளும் இணைந்து தமிழகத்தில் மத ரீதியிலான தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளன.
ஒரு மசோதாவை ஆதரித்தோ எதிர்த்தோ வாக்களிக்க மக்கள் பிரதிநிதிகளுக்கு உரிமை உண்டு. அந்த வகையில் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு ஆதரவு அளித்து வாக்களித்த தேனி எம்பி ரவீந்திரநாத் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது.
போராட்டம்
சீமான் சிவ வழிப்பாட்டை கொச்சைப்படுத்தி வருகிறார். இந்து மதத்திற்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்களை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். தஞ்சை பெருவுடையார் கோயில் விதிக்கு புறம்பாக நடந்த கோயில் அதிகாரியை சஸ்பெண்ட் செய்யாவிட்டால் பெரிய போராட்டம் நடத்தப்படும்.
விபத்து
திமுகவுக்கு அறிவு இல்லாததால் பிரசாந்த் கிஷோரை அழைத்துள்ளது. ஸ்ரீரங்கத்தில் நெற்றியில் வைத்த பொட்டை அழித்த திமுக தலைவர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும். இந்து கோவில்களில் தமிழில் வழிபாடு நடத்த வேண்டும் எனச் சொல்பவர்கள், பள்ளிவாசலில் தமிழில் வழிபாடு நடத்த முடியுமா? நெய்வேலியில் நடைபெற்ற சினிமா படப்பிடிப்பில் ஏற்கெனவே விபத்து நடந்ததால் விஜய் படப்பிடிப்பு நடத்தக் கூடாது என்றோம்.
சினிமாவில் கருப்பு பணம்
மற்றபடி விஜய்க்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தமிழகத்தில் பாஜக தலைவர் விரைவில் நியமிக்கப்படுவார். பிரதமராக மோடி பொறுப்பேற்ற பிறகு இலங்கையில் ஒரு தமிழர் கூட கொல்லப்படவில்லை. நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித் துறை நடத்தியது அந்த துறை சுயேச்சையாக செயல்படுகிறது. சினிமாவில் கருப்பு பணம் உள்ளது என்றார்.
வெற்றி நடை
வரும் 2021-ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்பதால் தேர்தல் வியூகம் வகுத்து தர அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரை திமுக வரவழைத்துள்ளது. இது போல் பீகார் முதல்வர் நிதிஷ் குமார், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உள்ளிட்டோர் இவரது வியூகத்தை பின்பற்றி வெற்றி நடை போடுகின்றனர்.
பாஜக
இவ்வளவு ஏன் கடந்த 2011-ஆம் ஆண்டு மோடி குஜராத் முதல்வராக பிரசாந்த் கிஷோர்தான் வியூகம் வகுத்தார். அது போல் 2014-ஆம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சி அமைக்கவும் பிரசாந்த் வியூகம் வகுத்துள்ளார். இதை எச் ராஜா மறந்துவிட்டாரா என்ன? இது போல் சேம் சைட் கோல் போடும் எச் ராஜா மீது பாஜக தலைமை நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.