மதுரையில் கனமழை.. வைகை ஆற்றில் வெள்ளம்.. மலை போல் குவிந்த நுரையால் பரபரப்பு
மதுரை: மதுரையில் இரவு முழுவதிலும் பெய்த மழையால் வைகை ஆற்றின் தடுப்பணைகளில் நிரம்பிய நீர், நுரை போல் பொங்கி மலை போல் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளார்கள்.
Recommended Video
மதுரை மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதிலும் இரவு முழுவதிலும் பெய்த மழை காரணமாக வைகை ஆற்றில் மழை நீர் வர தொடங்கியது. இதனால் அங்குள்ள நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன.

தடுப்பணைகள்
இதையடுத்து மதுரை யானைக்கல் பகுதியில் உள்ள தடுப்பணைகள் மழைநீரால் நிரம்பிய நிலையில் தண்ணீர் செல்ல வேண்டிய பகுதியில் முழுவதிலுமாக ஆகாய தாமரைச் செடிகள் அகற்றப்படாமல் இருந்த நிலையில் தண்ணீர் நிரம்பி தரைப்பாலத்தில் தண்ணீர் ஓட தொடங்கியுள்ளது.

வைகை ஆற்றோர பகுதி
மேலும் தடுப்பணையில் உள்ள நீரில் முழுவதிலுமாக நுரை பொங்கி காட்சியளிப்பதோடு, வைகை ஆற்றோர பகுதிகளான செல்லூர், மீனாட்சிபுரம் ஆகிய பகுதிகளிலும் நுரையுடன் இருப்பதால் பொதுமக்கள் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.

ரசாயனம்
வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க பல கோடி ரூபாய்க்கு திட்டங்கள் செயல்படுத்தபட்டு வரும்நிலையில் மீண்டும் சாக்கடை நீர் வைகையாற்றில் கலப்பதால் நுரை பொங்குகிறதா இல்லையெனில் ரசாயனம் ஏதும் கலந்து நுரை பொங்குகிறதா என நீர் நிலை ஆர்வலர்கள் சந்தேகம் அடைந்துள்ளனர்.

தூர்வார நடவடிக்கை
மழை பெய்து வரும் நிலையில் வைகை ஆற்றை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது. மதுரையில் 3 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications