மதுரையில் வெளுத்து வாங்கிய கனமழை.. வீசிய காற்றில் முறிந்து விழுந்த மரங்கள்.. குளமான சாலைகள்
மதுரை: பலத்த காற்றுடன் கொட்டித்தீர்த்த கனமழையால் மதுரை மாநகரின் பல பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. மதுரையின் முக்கிய சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளன. சுரங்கப்பாதைகளில் வெள்ளநீர் குளம் போல தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தமிழகம், கேரளா, கர்நாடக மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. வானிலை மையம் வெளியிட்ட தினசரி செய்திக்குறிப்பில், ""வட தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்த நிலையில் இன்று காலை முதலே மேகமூட்டமாக காணப்பட்டது. பிற்பகல் நேரத்தில் குளிர்ந்த காற்று வீசியது. பலத்த காற்றுடன் கூடிய கனமழை கொட்டியது. கே.கே.நகர், செல்லூர், நரிமேடு, சிம்மக்கல் உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை கொட்டியது.
காற்று வீசியதால் மதுரை நகரின் பல பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. செல்லூர் தத்தனேரி சுரங்கப்பாதையில் வெள்ளநீர் குளம் போல தேங்கியுள்ளது. பள்ளி, கல்லூரிகள் விடும் நேரத்தில் பலத்த மழை கொட்டியதால் மாணவர்களும், வேலைக்கு சென்று வீடு திரும்பியவர்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மதுரை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மாலை முதலே மழை பெய்து வருகிறது. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications