எல்லாம் சென்னைக்கே போனா ‘தெற்கு’ எப்படி வளரும்? தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி!
மதுரை: சித்த மருத்துவப் பல்கலைக்கழகத்தை நெல்லையில் இருந்து சென்னைக்கு இடமாற்றம் செய்வதற்கான காரணம் என்ன என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
திருநெல்வேலி அருகே இந்திய மருத்துவத்திற்கான பல்கலைக்கழகம் அமைக்க, 2004ல் தமிழக அரசு திட்டமிட்டது. இதற்காக, 200 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. பின்னர் எந்த நடவடிக்கையும் இல்லாத நிலையில், சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி மாணவர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

திருநெல்வேலியில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 2020ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. இந்நிலையில், அரசு கொள்கை முடிவின் அடிப்படையில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகத்தை சென்னைக்கு மாற்ற முடிவு செய்துள்ளதாகவும், சென்னை மாதவரம் பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு தாக்கல் செய்த புதிய மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், அரசின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்தனர். சென்னைக்கு சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தை இடமாற்றம் செய்வதற்கான காரணம் என்ன என்றும் அனைத்து பல்கலைக் கழகங்களும் சென்னைப் பகுதியிலேயே அமைந்தால், தமிழ்நாட்டின் தென் பகுதி எப்படி வளர்ச்சி அடையும் எனவும் கேள்வி எழுப்பினர்.

மேலும், சித்த மருத்துவப் பல்கலைக்கழகத்தை சென்னைக்கு இடமாற்றுவதற்கான காரணம் குறித்து 2 வாரத்திற்குள் தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்யவும் ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications