கோடை காலத்தில் பட்டாசு தயாரிப்புக்கு தடை விதிக்கலாமே.. தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை யோசனை!
மதுரை: கோடை காலங்களில் பட்டாசு தயாரிப்பை நிறுத்தி வைப்பது தொடர்பாக தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வு, வழக்கை ஜூன் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. பட்டாசு ஆலை வெடி விபத்துகள் தொடர்ந்து வரும் நிலையில் கோடை காலமான ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் பட்டாசு தயாரிப்புக்கு தடை விதிப்பது தொடர்பாக பரிசீலிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த சமுத்திரவள்ளி உள்ளிட்டோர் கடந்த 2014 ஆம் ஆண்டு பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த கணவரின் மரணத்திற்கு இழப்பீடு கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த மனு நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப் பணி, கைம்பெண் ஓய்வூதியம், வீடு உள்ளிட்ட மறுவாழ்வு பணிகளை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை வழங்கியிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் அரசு தரப்பில் மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, "தொடர்ச்சியாக விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது? இது வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இந்த பிரச்சனைக்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும்" எனத் தெரிவித்தனர்.
அப்போது அரசுத் தரப்பில், "விருதுநகர் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்குக்காக ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள், "தொழிலாளர்களுக்கு 25 முதல் 30 லட்சம் ரூபாய் காப்பீடு செய்த பின்னரே அவர்கள் அப்பணியில் ஈடுபடுத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். விபத்துகள் நிகழ்வது துரதிர்ஷ்டவசமானது. ஆனால், பெண்களே பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர்" என்றனர்.
மேலும், "கோடை காலமான ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் பட்டாசு தயாரிப்பை நிறுத்தி வைப்பது தொடர்பாக அரசு முடிவெடுக்க வேண்டும்" என குறிப்பிட்டு, வழக்கறிஞர்கள் தரப்பில் பட்டாசு ஆலை விபத்துகளை தடுப்பது தொடர்பான பரிந்துரைகளை வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை வரும் ஜூன் 8 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளில் அவ்வப்போது வெடி விபத்துகள் நடப்பது தொடர்கதையாகி வருகிறது. அண்மையில் கட்டனார்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 25 பேர் பலியாகினர். இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.














Click it and Unblock the Notifications