மதுரை, ராமநாதபுரம், சிவகங்கையில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுத்த ஐகோர்ட்.. காரணம் என்ன தெரியுமா?
மதுரை: மதுரை, ராமநாதபுரம், சிவகங்கையில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி மறுத்துள்ளது ஐகோர்ட் கிளை. ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த கோரிய வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
விஜயதசமி நாளான அக்டோபர் 22ஆம் தேதி மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, விருதுநகர், புதுகோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, கரூர், தென்காசி, தஞ்சாவூர், சிவகங்கை உள்பட 14 மாவட்டங்களில் 20 இடங்களில் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி ஆர்எஸ்எஸ் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அந்த மனுக்களில் இந்தியாவின் 75-வது ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடும் வகையிலும், அம்பேத்கர் பிறந்தநாளை ஒட்டியும் விஜயதசமி நாளான அக்டோபர் 22-ல் ஆர்எஸ்எஸ் சீருடையான காக்கி டவுசர், வெள்ளை சட்டை, தொப்பி, பெல்ட், ஷூ அணிந்து, இசை வாத்தியத்துடன் மாலையில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி அந்தந்த காவல் நிலையங்களில் மனு அளிக்கப்பட்டது. ஆனால், காவல்துறை இதுவரை அனுமதி அளிக்கவில்லை.
கடந்த ஆண்டிலும் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் பேரணிக்கு அனுமதி வழங்க உத்தரவிடப்பட்டது. அதன்பிறகும் அனுமதி தரவில்லை. நீதிமன்ற அவமதிப்பு தொடரப்பட்டு அனுமதி பெறப்பட்டது. எனவே, இந்த ஆண்டு ஆர்எஸ்எஸ் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன், அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.எம். அன்புநிதி ஆகியோர் ஆஜராகினர். சட்டம் ஒழுங்கு பிரச்சனையை கருத்தில் கொண்டு, தற்போது அனுமதி வழங்கப்படவில்லை, தேவர் ஜெயந்தி, குலசை தசரா விழா ஆகியவை முடிந்த பிறகு, அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிப்பதாக தெரிவிக்கப்பட்டது.
சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனக் கூறி, மாநில அரசு தொடர்ந்து அனுமதி மறுத்து வருவதாக கூறிய ஆர்.எஸ்.எஸ் தரப்பு வழக்கறிஞர், உச்ச நீதிமன்றம் வகுத்த விதிமுறைகள் படி பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை இன்றைய தேதிக்கு ஒத்தி வைத்தார். அதன்படி இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 3 மாவட்டங்களில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மற்ற மாவட்டங்களில் பேரணியை நடத்திக் கொள்ளலாம் என்றும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்து, வழக்கை முடித்து வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications