இந்து நூல்களை எரித்து போராட்டம்! ஸ்ரீரங்கம் கோயிலுக்கு பாதுகாப்பு வழங்க ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவு
மதுரை: இந்து மத நூல்களை எரித்து போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
நாளை (செப்,17) பெரியார் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், மக்கள் அதிகாரம் அமைப்பு இந்து கோயில்கள் முன்பு போராட்டத்தை அறிவித்து இருந்தது.
இது தொடர்பான வழக்கு மதுரை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், இதில் முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

போராட்டம்
பெரியார் பிறந்த நாள் நாளை கொண்டாடப்படும் நிலையில், திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு முன்பு, மனு நீதி உள்ளிட்ட இந்து நூல்களை எரிக்கும் போராட்டத்தை மக்கள் அதிகாரம் அமைப்பு அறிவித்து இருந்தது. திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு முன்பு, மட்டுமின்றி, பல இந்து கோவில்கள் முன்பு இந்த போராட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டது.

வழக்கு
இந்நிலையில், இந்த போராட்டம் சட்டவிரோதமானது என்றும் இதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் ரங்கராஜன் நரசிம்மன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த மனு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்துக்களின் புனித நூல்கள் ஆகமங்கள், மனு நீதி எரித்து போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளதாகவும் இது மத உணர்வுகளை புண்படுவதும் வகையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

வாதம்
பொதுமக்கள் அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் நடைபெறும் இந்தப் போராட்டத்திற்கு அனுமதி தரக் கூடாது என்றும் வாதிட்டார். மேலும், போலீசார் இந்தப் போராட்டத்திற்கு அனுமதி அளிக்கவில்லை என்பதையும் குறிப்பிட்டார். அப்போது தமிழக அரசு வழக்கறிஞரும், "போராட்டம் குறித்து மக்கள் அதிகாரம், திராவிடர் கழகம் சேர்ந்தவர்களை அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.

தமிழக அரசு
அதில் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு ஒரு மதத்தினரையோ அவர்களில் வழிபாட்டு முறைகளையோ மத நம்பிக்கையோ அவமதிக்கும் விதமாகப் போராட்டங்கள் நடத்த அனுமதிக்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது இதனை மீறி போராட்டம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார். இதனைப் பதிவு செய்த நீதிபதிகள் அவரவர் விரும்பிய வழிபாட்டுக்களை வழிபடலாம் அதற்கு உரிமை உண்டு எனக் கருத்தைத் தெரிவித்தனர்.

உத்தரவு
மனுதாரர் கோரிக்கை குறித்து போலீசார் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர் என்றும் மேலும் போராட்டங்கள் நடத்த அனுமதிக்கவில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தார். மேலும், ஸ்ரீரங்கம் கோவில் வழிபாடு மற்றும் பக்தர்களுக்குத் தேவையான போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications