அப்பீல் செய்ய மட்டும் நேரம் இருக்கா? இதுக்கு மட்டும் வர்றீங்க.. மத்திய அரசை விமர்சித்த ஐகோர்ட் கிளை!
மதுரை : மத்திய அரசும், நிதி அமைச்சகமும் பல்வேறு வழக்குகளில் நீதிமன்ற உத்தரவுகளை செயல்படுத்துவதில்லை, ஆனால், அரசின் உத்தரவுக்கு தடை விதித்தால் மட்டும் மேல்முறையீடு செய்கிறது என மதுரை ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது.
நீதிமன்ற உத்தரவுகளை மத்திய அரசும், நிதி அமைச்சகமும் செயல்படுத்துவதில்லை என மதுரை ஐகோர்ட் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகன் என்பவரின் மனுவை விசாரித்தபோது உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் மத்திய அரசின் செயல்பாட்டுக்கு அதிருப்தி தெரிவித்தனர்.

மத்திய அரசு வனப் பாதுகாப்பு திருத்த மசோதாவை முன்மொழிந்துள்ளது, இது குறித்து 15 நாட்களில் தங்களது கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என அறிவிப்பில் கூறியுள்ளது. ஆனால், இந்தி, ஆங்கிலம் தெரியாதவர்கள் இதில் கருத்து தெரிவிக்க முடியாது என்பதால் மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பாணைக்கு தடை விதிக்கக் கோரி வழக்கறிஞர் தீரன் முருகன் என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், வனப் பாதுகாப்பு திருத்த சட்டம் தொடர்பான அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை விதித்தனர். தடை உத்தரவை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்தது. இந்த நிலையில், மத்திய அரசின் செயல்பாடுகளை மதுரை உயர் நீதிமன்ற கிளை விமர்சித்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதிகள் சுப்பிரமணியம், விக்டோரியா கௌரி ஆகியோர் அமர்வு, மத்திய அரசின் வனப்பாதுகாப்பு சட்டத்திற்கு தடை விதித்தது பற்றி உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டிய அவசரம் என்ன? என கோபமாக கேள்வி எழுப்பினர்.
மேலும், "பல்வேறு வழக்குகளில் மத்திய அரசு நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றுவதில்லை. நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத மத்திய அரசு, அதன் உத்தரவுக்கு தடை உத்தரவு பிறப்பித்தால் மட்டும் உடனடியாக மேல்முறையீடு செய்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?" என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications