'இனி குடிக்க மாட்டோம்..' என்று உறுதியளித்தால் ஜாமீன்.. ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு
மதுரை: மது பிரச்சினையில் நண்பனைத் தாக்கியதாகக் கைது செய்யப்பட்ட இருவர் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்த நிலையில், 'இனி குடிக்க மாட்டோம்' எனப் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தால், ஜாமீன் வழங்குவதாகக் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
திருச்சியில் கடந்த ஜூலை 25ஆம் தேதி சிவா, கார்த்திக், சுரேஷ் மற்றும் பாண்டியன் ஆகியோர் சேர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது நால்வருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
முதலில் வாய் தகராறாக இது தொடங்கினாலும் பிரச்சினை மோசமடைந்துள்ளது. அப்போது சிவா மற்றும் கார்த்திக் இருவரும் அங்கிருந்த பீர் பாட்டிலை எடுத்து சுரேஷை தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இருவர் கைது
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.கடந்த 37 நாட்களாகவே இருவரும் சிறையில் உள்ளனர். இருவரும் கீழமை நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி விண்ணப்பித்திருந்தனர். இருப்பினும், அந்த ஜாமீன் மனுவை கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இந்நிலையில், சிவா மற்றும் கார்த்திக் இருவரும் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

ஜாமீன் கோரி வழக்கு
அந்த மனுவில், "ஜூலை 25ஆம் தேதி நண்பர்களான சுரேஷ், பாண்டியன் உள்ளிட்டோருடன் சேர்ந்து மது அருந்திய போது, பிரச்சினை ஏற்பட்டதால், நாங்கள் பீர் பாட்டிலைக் கொண்டு சுரேஷை தாக்கியதாக எங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க பொய்யான ஒரு வழக்கு. கணக்கு காண்பிக்க வேண்டும் என்பதற்காகவே போலீசார் இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளனர்.

நீதிமன்றத்திற்குக் கட்டுப்படுகிறோம்
37 நாட்களுக்கும் மேலாக நாங்கள் சிறையில் இருக்கிறோம். கீழமை நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி நாங்கள் தொடர்ந்து மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றம் விதிக்கும் எந்தவொரு நிபந்தனைக்கும் நாங்கள் கட்டுப்படுகிறோம். எனவே, ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது.

மது குடிக்க மாட்டோம் எனப் பிரமாணப் பத்திரம்
இந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. மது அருந்திய காரணத்தினாலேயே இந்த பிரச்சினை ஏற்பட்டது எனக் குறிப்பிட்ட நீதிபதி புகழேந்தி, ஜாமீன் கோரி விண்ணப்பித்த இருவரும் இனிமேல் தாங்கள் குடிக்க மாட்டோம் எனப் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தால், ஜாமீன் வழங்குகிறேன் எனக் கூறினார். மேலும் இந்த வழக்கின் விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு நீதிபதி புகழேந்தி ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications