எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம்.. ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு செல்லாது.. தடை விதித்தது ஐகோர்ட் கிளை
மதுரை: பக்தர்கள் உணவருந்திய எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்யலாம் என தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்த தீர்ப்புக்கு தடை விதித்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை. தமிழ்நாடு அரசு, அனைத்து சாதி அர்ச்சகர் மாணவர் சங்கத் தலைவர் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல் முறையீடு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே நெரூர் பகுதியில் உள்ள சதாசிவ பிரம்மேந்திரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் ஒரு நாளில் அன்னதானம் நடைபெற்று வருகிறது. அந்த நாளில் சாப்பிட்ட எச்சில் இலையில் பக்தர்கள் உருண்டு அங்கப்பிரதட்சணம் செய்து வந்தனர். இந்த நடைமுறைக்கு எதிராக வழக்கு தொடரப்பட்ட நிலையில், 2015ஆம் ஆண்டு இந்த நடைமுறைக்கு தடை விதிக்கப்பட்டது. 10 ஆண்டுகளாக இந்த நடைமுறை நடைபெறாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் எச்சில் இலைகளின் மீது அங்கப்பிரதட்சணம் செய்யும் புனிதமான சடங்குக்கு அனுமதி அளிக்கவேண்டும் என்று கோரி கரூர் நவீன்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன், இந்த எச்சில் இலை மீது அங்கப்பிரதட்சனம் செய்யும் நிகழ்வை நடத்திக் கொள்ளலாம் என கடந்த ஆண்டு மே 17ஆம் தேதி தீர்ப்பு அளித்தார்.
இதையடுத்து, கடந்த ஆண்டு மே 18 ஆம் தேதியன்று, நெரூரில் பக்தர்கள் உணவு சாப்பிட்ட பிறகு சாப்பிட்ட இலைகளில் அங்கபிரதட்சணம் செய்தனர். எச்சில் இலையில் உருண்டு நேர்த்திக்கடன் செய்வதை உயர் நீதிமன்றமே அங்கீகரித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. மனிதர்களை இழிவு செய்யும் இந்த சடங்குக்கு நீதிமன்றம் துணை போவதா என விமர்சனங்கள் எழுந்தன.
எச்சில் இலையில் அங்கப் பிரதட்சணம் செய்யலாம் என்ற தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டது. தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவை எதிர்த்து கரூர் ஆட்சியர் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2015 முதல் தற்போது வரை பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்கப் பிரதட்சணம் செய்யும் நிகழ்வுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை என்ற நிலையில் பழைய உத்தரவுகளை மறைத்து, தங்களுக்கு சாதகமான உத்தரவை பெற்றுவிட்டனர் என அரசு தரப்பு தெரிவித்திருந்தது. அனைத்து சாதி அர்ச்சகர் மாணவர் சங்கத் தலைவரும், இந்த வழக்கில் மேல் முறையீடு செய்திருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கில் இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்துள்ளது. பக்தர்கள் எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்யலாம் என தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்த தீர்ப்புக்கு தடை விதித்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.
எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்வது சுகாதாரத்துக்கும் மனித மாண்புக்கும் உகந்தது அல்ல என்றும், ஏற்கெனவே இதுபோன்ற நிகழ்வுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது என்றும் தெரிவித்து, இதுபோன்ற நிகழ்வுகளுக்கு தடை விதிப்பதாக ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications