அமெரிக்காவ பாருங்க.. 2000 வருச புராதன சின்னங்களை வச்சிக்கிட்டு சும்மா இருக்கோம்: ஐகோர்ட் நீதிபதிகள்
மதுரை : அமெரிக்கா போன்ற நாடுகள் 100 வருட புராதன சின்னங்கள் என்று கூறி படங்களை எடுத்து பல கோடிக்கு வியாபாரம் செய்யும் சூழலில், நாம் 2000 வருட புராதன சின்னங்களை வைத்துக்கொண்டு சும்மா இருக்கிறோம் என ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அனுமதியின்றி எடுக்கப்பட்ட சிற்பங்கள் மற்றும் சிலைகளின் புகைப்படம் மற்றும் வீடியோ ஆகியவற்றை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க உத்தரவிடக் கோரிய வழக்கு விசாரணை கடந்த சில வாரங்களாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்று வந்தது.

மதுரை புதூர் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், "உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் சி.ஐ.எஸ்.எப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கோயிலின் உள்ளே செல்போன் கேமரா மற்றும் எலக்ட்ரிக் சாதனங்கள் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கோயிலில் உள்ளே உள்ள சிலைகள் மற்றும் சிற்பங்கள் ஆகியவற்றை புகைப்படங்கள் எடுக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஆனால், அருண் போட்டோகிராபி, ஸ்டாலின் போட்டோகிராபி, ஒன் கிளிப் போட்டோகிராபி, சீரா போட்டோகிராபி மற்றும் அருவி போட்டோகிராபி ஆகியோர் மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள சிற்பங்கள் மற்றும் சிலைகள் ஆகியவற்றின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆகியவற்றை எடுத்து தங்களின் லோகோ வைத்து பேஸ்ஃபுக், வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி இவர்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுக்க அனுமதி உள்ளதா என கேட்கப்பட்ட கேள்விக்கு மேற்குறிப்பிட்டுள்ள நபர்களுக்கு அனுமதி இல்லை என பதில் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, மீனாட்சி அம்மன் கோவிலில் அனுமதியின்றி எடுக்கப்பட்ட சிற்பங்கள் மற்றும் சிலைகளின் புகைப்படம் மற்றும் வீடியோ ஆகியவற்றை சமூக வலைதளங்களில் இருந்து நீக்கி, பாதுகாப்பை அதிகப்படுத்த உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணை கடந்த சில வாரங்களாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்று வந்தது. மீனாட்சி அம்மன் கோவிலின் உள்ளே புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுப்பதற்கு ஒப்பந்தம் கோரப்பட்டு அதன்படியே புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுக்கப்படுகிறது என கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உள்ளே புகைப்படங்கள் எடுக்கவோ, அதை சமூக வலைதளங்களில் பதிவிடுவதற்கு தடை விதிக்கவோ முடியாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
மேலும், அமெரிக்கா போன்ற நாடுகள் அங்கே 100 வருட புராதன சின்னங்கள் என்று கூறி படங்களை எடுத்து பல கோடிக்கு வியாபாரம் செய்யும் சூழலில், நாம் 2000 வருட புராதன சின்னங்களை வைத்துக் கொண்டு சும்மா இருக்கிறோம் என்றும் நீதிபதிகள் சுப்ரமணியன், விக்டோரியா கவுரி அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications