மத மோதலை உருவாக்க திட்டம்.. பாஜக நிர்வாகியின் பதிவுகளை நீக்க ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி உத்தரவு!
மதுரை: மத மோதல்களை உருவாக்கும் விதமான பதிவுகளை ஃபேஸ்புக்கில் வெளியிட்ட பாஜக நிர்வாகி குருஜியின் பதிவுகளை நீக்க நடவடிக்கை எடுக்குமாறு ஐகோர்ட் மதுரை கிளை, ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி.க்கு உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த அகமது பயாஸ் என்பவர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "ராமநாதபுரம் மாவட்டம் நம்புதலையைச் சேர்ந்த குருஜி என்பவர் பாஜக ஆன்மிக பிரிவு மாநில பொறுப்பாளராக இருந்து வருகிறார். தொண்டி பகுதியில் இந்து, இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்கள் சகோதரர்களாக பழகி வருகிறார். அவர்களுக்கிடையே பிரச்சனையை ஏற்படுத்தும் விதமாக குருஜி பேஸ்புக் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

குருஜி தொடர்ந்து மதக் கலவரத்தை ஏற்படுத்தும் விதமாகவே செயல்பட்டு வருகிறார். இஸ்லாமியர்களுக்கு எதிராக கீழ்த்தரமான வகையில் ஃபேஸ்புக் பதிவுகளை வெளியிட்டு வரும் பாஜக நிர்வாகி குருஜி மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்றவும் உத்தரவிட வேண்டும்." என்றும் தனது மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி பி.புகழேந்தி முன்பு கடந்த மாத இறுதியில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், "மனுதாரரின் புகாரின் பேரில் பாஜக ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் குருஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், புகார் அளித்து பல மாதங்கள் கடந்துள்ளது. இந்த மனு தாக்கல் செய்யப்பட்ட பிறகே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குருஜி அவரது முகநூலில் இந்து - முஸ்லிம் மக்களுக்கிடையே கலவரத்தை ஏற்படுத்தும் விதமாக பதிவுகளை பதிவிட்டு வருகிறார்" எனத் தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதி, மோசமான பதிவுகளை வெளியிட்டு வரும் குருஜி மீது வழக்கு பதிவு செய்ய இவ்வளவு தாமதம் ஏன்? இது போன்ற குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இந்த வழக்கு குறித்து விரிவான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி பி.புகழேந்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "பாஜக நிர்வாகி அருவருக்கத்தக்க மோசமான பதிவுகளை ஃபேஸ்புக்கில் பதிவிட்டு வருகிறார். இதுபோன்ற மோசமான பதிவுகளை எவ்வாறு பதிவு செய்ய முடிகிறது?
இதுபோன்ற குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும். மத மோதல்களை உருவாக்கும் விதமான பாஜக நிர்வாகியின் பதிவுகளை நீக்க உத்தரவிடுகிறோம். சர்ச்சைக்குரிய புகைப்படங்களை நீக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி.க்கு ஐகோர்ட் ஆணையிடுகிறது." என உத்தரவிட்டார்.
இதற்கிடையே, குருஜி கைது செய்யப்பட்ட நிலையில், ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். குருஜியின் ஜாமீன் மனு நேற்று நீதிபதி நக்கீரன் முன்பாக விசாரணைக்கு வந்த நிலையில், குருஜிக்கு ஜாமீன் வழங்க அரசு தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த வழக்கு விசாரணை ஜூலை 29 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications