மது விற்பது தான் உங்க வேலையா?.. டாஸ்மாக் வழக்கில் அரசை கேள்விகளால் திணறடித்த உயர் நீதிமன்றம்
மதுரை: மதுபானக்கடை திறக்க அனுமதி கேட்ட வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் தமிழ்நாடு அரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர். டாஸ்மாக் நடத்துவது அரசின் பணி இல்லையே. அரசு அதை ஊக்குவிக்கவில்லை என்றால் எதற்காக மதுபானம் விற்பனை செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபானக் கடைகளினால் ஏற்படும் பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன. டாஸ்மாக் மதுக்கடையை அரசே நடத்துவதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. ஆட்சி மாறினாலும், மாறாத காட்சியாக டாஸ்மாக் விற்பனையை திமுக, அதிமுக அரசுகள் ஊக்குவிப்பதை தொடர்ந்து வருகிறார்கள்.

டாஸ்மாக் மதுபானம், போதை பொருட்களால் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின்போது, திமுக ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகள் படிப்படியாக மூடப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தனர். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதை நிறைவேற்றாமல் இருப்பது விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.
திமுக கூட்டணியில் உள்ள விசிக உள்ளிட்ட கட்சிகளே பூரண மதுவிலக்கு கோரிக்கையை அழுத்தமாக பதிவு செய்து வருகிறார்கள். ஒருபக்கம் டாஸ்மாக் மறுபக்கம் மனமகிழ் மன்றம் என்கிற பெயரில் காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை தனியார் மதுபானம் ஊக்குவிப்பதை அரசு ஊக்குவித்து வருவதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறு வருகிறார்கள்.
இந்நிலையில், மதுரை கைத்தறி நகர் பகுதியில் மதுபானக் கடை திறக்க அனுமதி கேட்டு மேகலா என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், மரிய கிளாட் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
"அரசு ஒரு பக்கம் டாஸ்மாக் கடைகளை திறந்து, மறுபக்கம் போதை மறுவாழ்வு மையங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அரசின் கொள்கைகள் முற்றிலும் முரணாக உள்ளன. நம் வீட்டு குழந்தைகளுக்கு என்றால் இப்படி செய்வோமா. ஆன்லைன் ரம்மி விஷயத்தில் நடவடிக்கை எடுத்த அரசு, டாஸ்மாக் விவகாரத்தில் வேறு விதமான நிலைப்பாட்டில் உள்ளது.
அந்த கால திரைப்படங்களின் மது, வன்முறை உள்ளிட்ட காட்சிகள் இடம் பெறாது. இந்த கால திரைப்படங்களில் மது, வன்முறை காட்சிகள் இல்லாமல் திரைப்படங்கள் வெளியாவதில்லை. அரசே டாஸ்மாக் கடையை நடத்த வேண்டிய அவசியம் என்ன. மதுபானம் விற்பது அரசுடைய பணி இல்லையே. மது விற்பதை அரசு ஊக்குவிக்கவில்லை என்றால், எதற்காக மதுவை விற்பனை செய்ய வேண்டும்.
அரசு நடத்துவதற்கு ஏராளமான தொழில் நிறுவனங்கள் இருந்தும் டாஸ்மாக் இயக்க வேண்டிய அவசியம் என்ன. டாஸ்மாக், ரம்மி ஆகிய இரண்டுமே உயிரை பறிக்கும் அபாயமானவை. டாஸ்மாக் விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு தான் என்ன. பல சட்டவிரோத சம்பவங்களுக்கு டாஸ்மாக் மதுபானம் தான் காரணம்." என்று நீதிபதிகள் கூறினர்.
இதற்கு அரசுத்தரப்பில், "அரசு மதுபானத்தை ஊக்குவிக்கவில்லை. இனி மதுபானக்கடைகளின் எண்ணிக்கை அதிகரிக்காது. கடைகள் படிப்படியாக மூடப்படும்." என்றனர். அதற்கு நீதிமன்றம், "அனைத்துக் கட்சிகளும் மதுபானக்கடைகள் மூடப்படும் என்கின்றனர். அதை யாரும் செய்வதில்லை.
ஏன் டாஸ்மாக் கடைகளை மூடாமல் வேறு பகுதிக்கு இட மாற்றம் செய்கிறீர்கள். அரசு கல்வி, வேலை வாய்ப்பு, பொதுநலன் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்." என்று சொல்லி அரசுத் தரப்பில் எழுத்துபூர்வமான பதிலை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்தனர்.












Click it and Unblock the Notifications