மதுரை குலுங்க குலுங்க.. விநாயகர் சிலை ஊர்வலம் நடத்திய இந்து முன்னணி.. திரண்ட பொதுமக்கள்!
மதுரை: மதுரையில் இந்து முன்னணி சார்பில் இன்று விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் வைகை ஆற்றில் கரைக்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன.
தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மதுரையில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு கணபதி ஹோமமும், அபிஷேக ஆராதனைகளும் செய்யப்பட்டன. விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, கொழுக்கட்டை, சுண்டல் உள்ளிட்டவை படைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

மதுரையில் பொது இடங்களில் போலீசாரின் அனுமதி பெற்று ஏராளமான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றிற்கு பூஜைகள் நடத்தப்பட்டு வந்தன. விநாயகர் சிலை வைக்கப்பட்ட இடங்களில் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு வழங்கி வந்தனர்.
இந்நிலையில், விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. களிமண் உட்பட நீர்நிலையை மாசுபடுத்தாத பொருட்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி மதுரையில் இன்று மாலை விளக்கு தூண் பகுதியிலிருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வைகையாற்றில் கரைக்க கொண்டு செல்லப்பட்டது.

விநாயகர் சிலைகள், மேல தாளம் முழுங்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. இந்து முன்னணி சார்பாக மதுரையில் நடைபெற்ற இந்த ஊர்வலகத்தில் ஏராளமான இந்து முன்னணி அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். முன்னதாக இந்து முன்னணி மாநில செயலாளர் கிஷோர் சிறப்புரையாற்றி விநாயகர் சிலை ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
விநாயகர் ஊர்வலம் மதுரை மேல மாசி வீதியில் நடந்து வரும் நிலையில் ஏராளமான பொதுமக்கள், இந்த ஊர்வலத்தைக் காணத் திரண்டுள்ளனர். விநாயகர் சிலைகளுடன் வாகனங்கள் போட்டி போட்டுச் செல்ல, இந்த ஊர்வலம் நடைபெற்று கொண்டிருக்கிறது.
இந்து முன்னணி சார்பில் மதுரையில் நடைபெறும் விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை முன்னிட்டு மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் 750க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications