ஏசி மின்கசிவால் மதுரை தம்பதி இறந்த சம்பவத்தில் திடீர் திருப்பம்.. தடயவியல் சோதனையில் புது ஆதாரம்!
மதுரை: மதுரையில் ஏசி இயந்திரத்தில் ஏற்பட்ட மின்கசிவால் தம்பதி இறந்ததாக கூறப்படும் சம்பவத்தில் திடீர் திருப்பமாக நவராத்திரி கொலுவில் வைக்கப்பட்ட மின் விளக்கில் மின் கசிவு ஏற்பட்டு தீப்பற்றியது தெரியவந்தது.
மதுரை ஆனையூரைச் சேர்ந்தவர் சக்திகண்ணன். இவரது மனைவி சுபா. இவர்களுக்கு காவியா என்ற மகளும், கார்த்திகேயன் என்ற மகனும் உள்ளனர். காவியா தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கார்த்திகேயன் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர்கள் 4 பேரும் எஸ்விபி நகரில் மாடியுடன் கூடிய ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர். வழக்கமாக இவர்கள 4 பேருமே ஏசி அறையில் தூங்குவது வழக்கம். ஆனால் நேற்று நள்ளிரவு நேரத்தில் அதிக மழை பெய்ததால் குளிர் தாள முடியாமல் காவியாவும் கார்த்திகேயனும் கீழே உள்ள அறையில் தூங்கினர்.

தூங்கிய தம்பதி
அப்போது தம்பதி தூங்கி கொண்டிருந்த அறையில் இருந்த ஏசி எந்திரத்தில் மின்கசிவு ஏற்பட்டு புகையும் வெளியே வரத்தொடங்கியது. அப்போது விழித்துக் கொண்ட சக்திகண்ணன், ரூம் முழுக்க புகை படர்ந்திருப்பதை கண்டு அதிர்ந்தார். உடனே மனைவியை எழுப்பினார். ஆனால் அதற்குள் புகை அறை முழுவதும் பரவத் தொடங்கியது.

தண்ணீரை கொண்டு அணைக்க
இதனால் தம்பதி இருவரும் அட்டாச்சுடு பாத்ரூமில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து ஊற்ற ஆரம்பித்தனர். உடனே ஏசி திடீரென வெடித்து சிதறியதில் புகை அதிகமாகிவிட்டது. இதில் அறையிலேயே சுபா மயங்கிவிட்டார். இது தெரியாமல் சக்தி கண்ணன் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். எனினும் தீ அடங்கவில்லை.

அறை முழுவதும் தீ
இதையடுத்து மயங்கிய மனைவியை சக்தி கண்ணன் தூக்கிக் கொண்டு அறையை விட்டு வெளியே வரத் தொடங்கிய போது தீ அறை முழுவதும் பரவி அவர்கள் உடல் கருகி உயிரிழந்துவிட்டனர். இந்த விபத்திற்கு ஏசியில் ஏற்பட்ட மின் கசிவுதான் காரணம் என முதல் கட்ட தகவல் வெளியானது. ஆனால் இந்த இறப்பில் திடீர் திருப்பமாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

அறையில் 5 அடுக்கு
நவராத்திரியை முன்னிட்டு வீட்டு மாடியில் உள்ள அறையில் 5 அடுக்கு கொண்ட கொலு மேடையை உருவாக்கி அதில் கொலுபொம்மைகள் வைத்து மின் விளக்குகளை கொண்டு அலங்கரித்துள்ளனர். இதில் பொம்மைகளுக்கு இடையே அணையாத விளக்குகளை பொருத்தியிருந்தனர். பலத்த காற்று, இடியுடன் கூடிய மழையால் உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து மின் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்ததாக சொல்லப்படுகிறது.

அலங்கார பேப்பர்
மின் வயர்களில் பற்றிய தீ பொம்மைகளுக்கு அருகில் இருந்த அலங்கார பேப்பர்களிலும் பரவி அறை முழுவதும் புகை சூழ்ந்தது. இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு தண்ணீரை கொண்டு அணைக்க முயன்றும் முடியாமல் தம்பதி உடல் கருகி பலியாகிவிட்டதாக தடயவியல் துறை சோதனையில் தெரியவந்தது.












Click it and Unblock the Notifications