மதுரை மாட்டுத்தாவணி சரவணா ஸ்டோர்ஸ்க்கு அனுமதி தந்ததில் விதிமீறல்! நீதிமன்ற படியேறிய ஹென்றி திபேன்!
மதுரை: மதுரை மாட்டுத்தாவணியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள சரவணா ஸ்டோர்ஸ்க்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு நிகழ்ந்துள்ளதாக கூறி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்துள்ளார் மனித உரிமை செயற்பாட்டாளர் ஹென்றி திபேன்.
கடை திறக்கப்பட்டு 30 நாட்கள் கூட ஆகாத நிலையில் சர்ச்சையில் சிக்கியிருக்கிறது மதுரை மாட்டுத்தாவணி பகுதி சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம்.

மதுரையில் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கும், மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கும் இடையில் புதிதாக கட்டப்பட்டு தொடங்கப்பட்டுள்ள சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் வியாபார நிறுவனத்தால், பொது போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும் பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக ஹென்றி திபேன் தனது மனுவில் கூறியுள்ளார்.
சரவணா ஸ்டோர்ஸ்க்கு அனுமதி கொடுக்கப்பட்ட விவகாரத்தில் குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 133-ன் கீழ் விதி மீறல் நடைபெற்றுள்ளது என மனுதாரரும் மூத்த வழக்கறிஞருமான ஹென்றி திபேன் குறிப்பிட்டுள்ளார்.
ஹென்றி திபேன் தொடர்ந்த வழக்கு 21.12.2022 இன்று அனுமதிக்கப்பட்டு பட்டியலிடப்பட்டது. நீதிபதி முரளிசங்கர் முன்பாக குறிப்பிடப்பட்டுள்ள இவ்வழக்கில் தீயணைப்பு துறையும், அனுமதி கொடுத்த அதிகாரிகளையும் விளக்கம் அளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், இவ்வழக்கு 23.12.2022 அன்று, அதாவது நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வருகிறது. எதிர்மனுதாரர்களான மீனாட்சி மிஷன் மற்றும் சரவணா ஸ்டோர்ஸ் உள்ளிட்ட அனைத்து எதிர் தரப்பினர்களுக்கும் Private Notice அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஹென்றி திபேனை பொறுத்தவரை பல ஆண்டுகளாக மனித உரிமை செயற்பாட்டாளராக இருந்து வருவதால் வழக்கு விவகாரத்தில் தகுந்த ஆதாரங்களை திரட்டுவதில் வலிமையானவர்.
இதனிடையே சரவணா ஸ்டோர்ஸ்க்கு எதிராக இவர் தொடர்ந்துள்ள வழக்கால் மதுரையில் பேசு பொருளாக ஆகியிருக்கிறார் ஹென்றி திபேன்.












Click it and Unblock the Notifications