பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட மனைவி மரணம்.. மாற்றுத் திறனாளி மகனைக் கொன்று விட்டு தந்தை தற்கொலை!
மதுரை: இதை விதியின் விளையாட்டு என்று சொல்வதா அல்லது வேறு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட மனைவி இறந்ததால் வேதனையில் தனது மாற்றுத் திறனாளி மகனைக் கொன்று விட்டு கணவரும் தற்கொலை செய்து கொண்டார்.
தனது சொத்துக்களை ஏழைகளுக்கு உதவ பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் கடிதம் எழுதி வைத்திருப்பது அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மதுரை எஸ்..எஸ்.காலனி பார்த்தசாரதி தெரு பகுதியில் கார்த்திகேயன் என்பவர் தனது மனைவி பாரதியை காதல் திருமணம் செய்த நிலையில் உறவினர்களின் தொடர்பின்றி அப்பகுதியில் உள்ள அபர்ணா அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 7வருடமாக வசித்து வசித்து வந்துள்ளார்.
முத்துப்பட்டி பகுதியில் இரும்பு வியாபாரம் செய்துவந்த நிலையில் கடந்த 2 வருடத்திற்கு முன்பாக கடையை விற்பனை செய்து விட்டு கடந்த 2 வருடமாக அந்த பணத்தை பயன்படுத்தி அன்றாட செலவுகளை செய்து வந்துள்ளார். இதனிடையே மனைவி பாரதி கடந்த 6வருடமாக வாதநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கண்பார்வை நோய் ஏற்பட்டதால் கணவர் கார்த்திகேயன் மனைவியை மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் கவனித்து வந்துள்ளார்.
இருவருக்கும் 14 வயதுடைய சபா என்ற மாற்றுத்திறனாளி மகனும் இருந்தார். உடல்நலமின்றி இருந்த மனைவி பாரதி இன்று காலை மரணமடைந்தார். இதனால் மனமுடைந்த கார்த்திகேயன் என்ன செய்வது என்று தெரியாமல், தனது மாற்றுத்திறனாளி மகனை பார்த்து மனம் நொந்து புலம்பியுள்ளார். மாற்றுத்திறனாளி மகனை இனி யார் கவனிப்பார் என நினைத்து மகனை கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு தானும் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தற்கொலைக்கு முன்பாக அவர் எழுதிய கடிதத்தில் தனது மனைவி இறந்துவிட்டதால் மாற்றுத்திறனாளி மகனை யாரும் கண்டுகொள்ளமாட்டார்கள் என குறிப்பிட்டதோடு நான் தற்கொலை செய்துகொள்கிறேன் எனவும், தனக்கு சொந்தமான பணம் மற்றும் சொத்தை ஏழை எளிய மக்களுக்கு வழங்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.
குடியிருப்பு வாட்ச்மேன் பராமரிப்பு பணம் பெறச்சென்று கதவை தட்டியபோது கதவு திறந்து கிடந்து உள்ளே போய்ப் பார்த்தபோதுதான் தற்கொலை செய்துகொண்டதை கண்டு போலிசாருக்கு தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து மாநகர் காவல்துறை இணை ஆணையர் சசிமோகன் மற்றும் எஸ்.எஸ்.காலனி போலிசார், தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி உடலை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்
மனைவி இறந்த சோகத்தில் மாற்றுத்திறனாளி மகனை கொலை செய்துவிட்டு தனக்கு சொந்தமான பணத்தை ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications