நாக்கை அடக்க முடியாது.. இப்படித்தான் பேசுவேன்.. காதை பொத்திக்கிட்டு போய்யா.. சீறிய அண்ணாமலை!
மதுரை: "அமைச்சர் என்பதால் தான் மரியாதை கொடுக்கிறேன். என்ன வேண்டுமானாலும் பேசுவதற்கு இது பழைய பாஜக அல்ல, அதே பாணியில் திருப்பி அடிப்பேன்" என அண்ணாமலை கூறியுள்ளார்.
ஆவின் பாலில் கொழுப்பின் அளவு குறைக்கப்பட்டுள்ளது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார். மேலும், ஆவின் பால் பாக்கெட்களில் கொழுப்பின் அளவு குறைவாக உள்ளதாக ஆய்வக பரிசோதனை அறிக்கை ஒன்றையும் அண்ணாமலை வெளியிட்டிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், "வடமாநிலங்களில் உள்ள நிறுவனங்களை தமிழகத்துக்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தோடு, அவர்களிடம் கையூட்டு பெற்று ஆவின் நிறுவனத்துக்கு எதிராக பேசுகின்றனர்" எனத் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, "நீங்கள் முன்வைத்த குற்றச்சாட்டிற்கான ஆதாரங்களைப் பொதுவெளியில் வெளியிடவேண்டும். உங்களால் நிரூபிக்க முடியவில்லையெனில், தவறான தகவலை பகிர்ந்தமைக்கு மன்னிப்பு கோரி, உங்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். நீங்கள் அமைச்சராக தொடர்வது, தமிழக மக்களுக்கும் ஆவின் நிறுவனத்திற்கும் பெரும் சாபக்கேடு" எனக் குறிப்பிட்டிருந்தார் அண்ணாமலை.
இதற்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் மனோ தங்கராஜ் எக்ஸ் தளத்தில், "ரபேல் வாட்ச் கட்டி ஆடுமேய்ப்பவரின் கதையை தான் கூறினேன். தம்பி அண்ணாமலை அவசரப்பட்டு முன்வந்து, நான் தான் அந்த வடநாட்டு கைக்கூலி அண்ணாமலை என்று கூறுவது ஏனோ? குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும். மன்னிப்பு கேட்காவிட்டால் என்ன, தலையை சீவி விடுவாயா? மன்னிப்பு கேட்க நாங்கள் ஒன்றும் சாவர்க்கார் பரம்பரை அல்ல!" எனப் பதிவிட்டிருந்தார்.
இதற்கு அண்ணாமலை, "கம்பி கட்டும் கதை எல்லாம் கூறிக்கொண்டிருக்கிறார் அமைச்சர் மனோ தங்கராஜ். நீதிமன்றத்தில் இந்தக் கதை எல்லாம் செல்லாது. ஆதாரமற்ற குற்றச்சாட்டை பரப்பிய உங்கள் மீது 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடரவுள்ளேன். அந்த ஒரு கோடி ரூபாய் பணம், ஆவின் நிறுவனத்திற்குப் பால் கொடுக்கும் நமது தமிழக விவசாயிகளின் மேம்பாட்டு நிதியாக ஆவின் நிறுவனத்திற்கு வழங்கப்படும்." எனத் தெரிவித்தார்.
அண்ணாமலை பரபர பேட்டி: தொடர்ந்து, இன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மனோ தங்கராஜ் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். மேலும் பேசிய அண்ணாமலை, "மனோ தங்கராஜ் அரசியலில் இருப்பது தமிழக மக்களின் சாபக்கேடு. அமைச்சர் என்பதால் தான் மரியாதை கொடுக்கிறேன். என்ன வேண்டுமானாலும் பேசுவதற்கு இது பழைய பாஜக அல்ல, பழைய ஆள் அல்ல. என்ன வேண்டுமானாலும் நீங்கள் பேசுவதற்கு.. அதே பாணியில் திருப்பி அடிப்பேன்.
நாவடக்கம் எல்லாம் இப்படித்தான் இருக்கும். அடக்க வேண்டுமென்றால் யாராவது ரம்பத்தை கொண்டு வந்து தான் அடக்க வேண்டும். இதெல்லாம் எப்போதும் மாறாது. பிறவி குணம், பிறந்தபோதே வந்தது. அரசியலுக்கு வந்த பிறகு இந்தக் கட்சிக்காரங்க சொல்றாங்க, அந்த கட்சிக்காரங்க சொல்றாங்க என்றெல்லாம் நாவை அடக்க முடியாது.
காதை பொத்திக் கொள்ளுங்கள்: மரியாதை எங்கு கொடுக்க வேண்டுமோ அங்கு தான் மரியாதை கொடுப்பேன். அண்ணாமலை நாவடக்கம் பேண வேண்டும் என்று சொன்னால் நீங்கள் காதை பொத்திக்கொண்டு போங்க. உங்களை நான் பேசுவதை கேட்கச் சொன்னேனா? காரசாரமாகத்தான் எங்கள் அரசியல் இருக்கும். எத்தனை நாட்களுக்கு சாக்கடை அரசியலை பார்த்துக்கொண்டே இருக்க முடியும்?
மக்களுக்காக பணியாற்றுபவர்கள் யாராக இருந்தாலும் என்னைப் போலத்தான் பேசுவார்கள். தகவல் தொழில்நுட்பத் துறையில் மனோ தங்கராஜ் செய்து ஃப்ராடு எல்லாம் DMK Files பார்ட் 2வில் கொடுத்துள்ளோம். அதெல்லாம் ஒரு நாள் வெடிக்கும். எங்கேயும் தப்பித்துப் போக முடியாது. மனோ தங்கராஜின் நாட்கள் எண்ணப்படுகின்றன." எனப் பேசியுள்ளார் அண்ணாமலை.












Click it and Unblock the Notifications