"ஊழலின் தலைவர்.." அண்ணாமலை பகீர் குற்றச்சாட்டு.. செந்தில் பாலாஜியுடன் முற்றும் மோதல்
மதுரை: பாஜக தலைவர் அண்ணாமலை, திமுகவின் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இடையே மோதல் முற்றி வருகிறது. இந்நிலையில் தான், ‛ எனக்கு கெடு விதிக்க அமைச்சர் செந்தில்பாலாஜி என்ன பிரம்மாவா.என்னை தாராளமாக கைது செய்யலாம். சிறையில் இருந்து வந்தாலும் செந்தில்பாலாஜியின் ஊழலை நிரூபிப்பேன் ' என பாஜகவின் அண்ணாமலை ஆக்ரோஷமாக கூறினார்.
தமிழக மின்வாரியத்தின் ரூ.4,442 கோடி மதிப்பிலான மின் திட்ட ஒப்பந்தம் விதிகளை மீறி பிஜிஆர் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது என பாஜகவின் அண்ணாமலை குற்றம்சாட்டி வருகிறார்.
இதற்கு செந்தில்பாலாஜி மறுப்பு தெரிவித்தார். மேலும் பொய்யான தகவல்களை பரப்பும் அண்ணாமலை பொது வெளியில் உண்மையை கூற வேண்டும். அல்லது மன்னிப்பு கோர வேண்டும். இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என கெடு விதித்தார்.

ஊழலின் தலைவர்
இந்நிலையில் மதுரையில் பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது: ஊழலின் தலைவராகவும், ஊழலின் தளபதியாகவும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி திகழ்கிறார். நல்ல மனிதராகவும், நல்ல நிறுவனத்துக்கு ஒப்பந்தம் கொடுத்ததாகவும் அவர் கூறுவது நகைச்சுவையாகவும், நகைப்பாகவும் உள்ளது. பிஜிஆர் நிறுவனத்தின் ஊழியராக அவர் பேசுவதை விட தமிழக மக்கள் ஓட்டுபோட்டு தேர்வு செய்த அரசாங்கத்தின் பிரதிநிதியாக பேசினால் சிறப்பாக இருக்கும் என்பது எனது கருத்து.

கைது செய்தாலும் சரி
என் மீது நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார். தயவு செய்து நடவடிக்கை எடுங்கள். இதற்கு காத்திருக்கிறேன். என்மீது அவதூறு வழக்கு போட்டாலும், போலீஸ் அதிகாரிகள் மூலம் கைது செய்து சிறையில் அடைத்தாலும் சரி என்ன தோன்றுகிறதோ அதை செய்யுங்கள். அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக காத்திருக்கிறேன். மேலும் எனக்கு கெடு விதிக்க அவர் என்ன பிரம்மாவா.

ஊழலை வெளிப்படுத்துவேன்
ஆனால் சிறையில் இருந்து வந்த பின்னும் செந்தில்பாலாஜி, திமுக அரசின் ஒவ்வொரு ஊழல்களையும் வெளிப்படுத்துவேன். தமிழகத்தில் திமுக பண அரசியல் செய்கிறது. அதற்காக சில அமைச்சர்களைக் களத்தில் இறக்கிவிட்டுள்ளது. அதை ஒவ்வொன்றாக வெளிப்படுத்தி வருகிறோம். பிஜிஆர் ஒப்பந்த முறைகேடு குறித்து தமிழக முதல்வருக்கும், செபிக்கும் கடிதம் அனுப்புவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

ஐ பெரியசாமி மறுப்பு
பாஜகவின் அண்ணாமலையின் இந்த குற்றச்சாட்டுக்கு செந்தில்பாலாஜி மறுப்பு தெரிவித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமியும் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‛‛பாஜக உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறது'' என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications