நம்மாளு பிடிஆர் மட்டும் மனசு வச்சா போதும்.. ஸ்டாலின் குடும்பமே ஜெயில்ல தான் - செல்லூர் ராஜூ தடதட!
மதுரை: நம் மண்ணின் மைந்தர் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மனது வைத்தால் ஸ்டாலின் குடும்பமே சிறையில் இருக்கும் என அதிமுக ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்யக்கோரி தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக ஆட்சியில் ஊழல், முறைகேடுகள், சட்டம்- ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றை கண்டித்தும், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்.பி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அந்தவகையில், மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆகியோர் தலைமையில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அதிமுகவினர் திமுக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, "நாள்தோறும் மக்கள் மீது வரி மேல் வரி விதிக்கிறார் முதல்வர் ஸ்டாலின். மக்கள் துன்பப்படுவது முதல்வருக்கு தெரிகிறதா தெரியவில்லையா என்பது தெரியவில்லை. சாலை வரியை கூட முதல்வர் உயர்த்தி உள்ளார். திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் வறட்சி, பிரச்சனை, நமது உரிமைகள் எல்லாம் அண்டை மாநிலங்களிடம் விட்டுக்கொடுத்து விடுவது என துன்பங்கள் தொடர்கின்றன.
பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகமாகப் பெற்று தன் தலைவனுக்கு பணத்தை கொண்டு போய் சேர்த்த செந்தில்பாலாஜி இன்று சரியாக மாட்டிக்கொண்டார். செந்தில் பாலாஜி நெஞ்சுவலி என்று சொல்வதெல்லாம் தன்னை பாதுகாத்து கொள்ளத்தான்.
அண்ணாநகர் ரமேஷ், சாதிக் பாட்சா நிலை தனக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகவே அமைச்சர் செந்தில் பாலாஜி இந்த நாடக அரங்கேற்றத்தை நடத்துகிறாரா என்று சந்தேகிக்க தோன்றுகிறது. செந்தில் பாலாஜிக்கு மூன்று மாத ஓய்வு கேட்பது சந்தேகமாக உள்ளது.
நம் மண்ணின் மைந்தர் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மனது வைத்தால் ஸ்டாலின் குடும்பமே சிறையில் இருக்கும். உதயநிதி ஸ்டாலின், சபரீசனின் 30 ஆயிரம் கோடி ஊழல் குறித்து வாய் திறக்க மனது வைத்தால் திமுகவினர் ஜெயிலுக்கு போவது உறுதி. அமைச்சர் பி.டி.ஆர் சொன்ன 30,000 கோடி விவகாரம் தான் இப்படி சுற்றி சுழன்று கொண்டிருக்கிறது.
கருணாநிதி காலம் தொட்டு திமுக பொய்யைச் சொல்லியே ஆட்சிக்கு வந்துள்ளது. தமிழ்நாட்டில் போதை பொருட்கள் விற்பனை அதிகரித்து உள்ளது. தமிழ்நாட்டில் 3 ஆயிரத்து 600 பார்கள் அனுமதியின்றி செயல்படுகின்றன. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்" எனப் பேசினார்.












Click it and Unblock the Notifications