மருத்துவ படிப்புகளில் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு முன்னுரிமை வழங்குங்கள்.. ஐகோர்ட் கிளை அதிரடி
மதுரை: இந்த கல்வி ஆண்டு முதல் மருத்துவ படிப்பில் இடஒதுக்கீட்டு பிரிவில், பணியில் உள்ள ராணுவ வீரர்களின் வாரிசுகளையும் சேர்க்க முன்னுரிமை வழங்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மருத்துவ படிப்புகளில் வாாிசுகளை சேர்ப்பதில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் தற்போது பணியில் உள்ள ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கும் கிடைக்கப்பெற வேண்டும் என்று கோரி உயர்நீதிமன்ற கிளையில், மதுரையை சேர்ந்த குறளரசன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தற்போது விரிவான உத்தரவை பிறப்பித்துள்ளார் அதில் எம்பிபிஎஸ்/பிடிஎஸ் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கையில் படைப்பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்குவது தொடர்பாக மத்திய அரசு கடந்த 2017ல் பட்டியல் வெளியிட்டுள்ளது.
அதில் 9 முன்னுரிமை பட்டியலில் 8-வது முன்னுரிமை, பணியிலுள்ள வீரர்களின் வாரிசுகளுக்கு வழங்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. வழக்கு தொடர்ந்த மனுதாரர் 8-வது முன்னுரிமை பட்டியலில் வருகிறார்.
தமிழகத்தில் மருத்துவ படிப்பில் படைப்பிரிவினருக்கு முன்னுரிமை வழங்குவது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை செயலர் கடந்த 2018ல் வெளியிட்ட அரசாணையில் மத்திய அரசின் முன்னுரிமை பட்டியலில் இடம் பெற்றிருந்த 9 முன்னுரிமைகளில் கடைசி 7 முதல் 9 வரையிலான முன்னுரிமை நீக்கப்பட்டுள்ளது.
இதனால் மனுதாரருக்கு பணியிலுள்ள ராணுவத்தினரின் வாரிசுகளுக்கான முன்னுரிமை பெற முடியாமல் போயுள்ளது. மத்திய அரசின் முன்னுரிமை பட்டியலில் இடம்பெற்றுள்ள கடைசி 3 முன்னுரிமை பட்டியல் இல்லாமல் தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ஏற்க முடியாது என நீதிபதி கூறியுள்ளார்
பணியிலுள்ள ராணுவத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்காமல், உயர் கல்வியில் படைப்பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் நோக்கம் நிறைவேறாது. எனவே தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டு முதல் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்பில் இடஒதுக்கீட்டு பிரிவில் பணியில் உள்ள ராணுவ வீரர்களின் வாரிசுகளையும் சேர்க்க வேண்டும் என உத்தரவிட்டார்












Click it and Unblock the Notifications