ஆதாரை இணைத்தால் மட்டுமே பொங்கல் பரிசு? சந்தேகம் கிளப்பும் செல்லூர் ராஜூ! என்ன சொல்கிறார் பாருங்க
மதுரை: மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, அனைத்து தரப்பினருக்கும் பொங்கல் பரிசாக திமுக 5000 ரூபாய் வழங்க வேண்டும் என்றார்.
சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாகப் பேசினார்.
குறிப்பாக திமுகவில் வாரிசு அரசியல் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், மன்னர் பரம்பரை தான் ஒழித்திருக்கிறோம் தவிரக் கருணாநிதி பரம்பரையை ஒழிக்க முடிவில்லை என்றும் அவர் கடுமையாகச் சாடினார்.

செல்லூர் ராஜூ
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, "திமுக ஆட்சியில் கூட்டுறவுத் துறையைச் செம்மைப் படுத்த வேண்டும்... அதிமுக ஆட்சி கூட்டுறவுத் துறை இதுபோல இருக்காது. ரேஷன் கடைகளில் கைரேகை திட்டத்தைக் கொண்டு வந்துள்ளார்கள். மூத்த குடிமக்களின் கைரேகை அதில் சரியாக விழுவதில்லை. இதன் காரணமாக கை ரேகை திட்டத்தைத் தவிர்க்க வேண்டும். திமுக கொடுத்த வாக்குறுதியை எதையும் நிறைவேற்றவில்லை.

ரூ. 5000 கொடுங்கள்
உலகத்தில் உள்ள அனைவரும் சாதி மத பாகுபாடு இன்றி கொண்டாடும் திருவிழா தான் பொங்கல் திருவிழா. அதிமுக ஆட்சியில் 2.40 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் தொகுப்பு மற்றும் பணம் அளித்தோம். ஆனால், திமுக ஆட்சியில் இப்படி எதுவும் கொடுக்கவில்லை.. இந்தாண்டு ஏதோ பொங்கல் தொகுப்பு பரிசு கொடுப்பதாகக் கூறியுள்ளனர். இது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தையும் கூட்ட உள்ளார். ஸ்டாலின் எதிர்க்கட்சியில் இருந்த போது சொன்னதை போல அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அவர் 5000 வழங்குவார் என்று நம்புகிறோம்.

ரேஷன் அட்டை
ஆதார் கார்டுடன் இணைத்தவர்களுக்குத் தான் பொங்கல் தொகுப்பு என்று கூறக் கூடாது. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்க வேண்டும். பொங்கல் பண்டிகை தொகை என்பது ஏழைகளுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம். பொங்கல் கொண்டாடுவதற்கு இதுதான் உறுதுணையாக இருக்கும். திமுக குறைந்தபட்சம் இந்த வாக்குறுதியாவது நிறைவேற்றித் தர வேண்டும் என நான் முதல்வரிடம் கேட்டுக்கொள்கிறேன். தற்போதைய சூழலில் முதல்வர் தான் கூறியதை போல 5000 ரூபாய் கொடுத்தால் மக்கள் அனைவரும் சந்தோஷமாக இருப்பார்கள்.

ரேஷன் அரிசி கடத்தல்
தமிழ்நாட்டில் ரேஷன் அரிசி கடத்தல் அதிகரித்துள்ளது. இதை முழுமையாகத் தடுக்க இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். சும்மா அறிக்கை மட்டும் விடுத்தால் போதாது... கடத்தலில் ஈடுபடும் வாகனங்களைப் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கடத்தலில் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை அறிந்து அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல்தான் போதைப் பொருள் வழக்குகளிலும் முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்படுவதில்லை.. கடைசி நிலையில் இருக்கும் விற்பனையாளர்கள் மட்டுமே கைது செய்யப்படுகின்றனர்.

போதைப்பொருள்
போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையில் அதிகபட்சம் 5 -10 கிலோ தான் பிடிக்கிறார்கள். முக்கிய குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும்... தற்போது கூட ராமேஸ்வரத்தில் இருந்து போதைப் பொருள் கடத்தல் 160 கோடி ரூபாய்க்கு நடந்துள்ளது. தொடர்ந்து இதுபோன்று நடப்பதற்கு மூலாதாரமாக இருக்கக்கூடிய நபர்களைக் கைது செய்ய வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்.

இன்பநிதி
இன்பநிதிக்கு கொடி பிடிப்போம் என மூத்த அமைச்சர் கே.என்.நேரு கூறியது உண்மைதான்.. திமுக அமைச்சர்கள் அனைவரும் அதை ஏற்றுத்தான் ஆக வேண்டும்... அங்கு எப்போதும் குடும்பம் தான் ஆட்சிதான்.. நாம் மன்னர் பரம்பரையைத் தான் ஒழித்து உள்ளமே தவிர, கருணாநிதி பரம்பரையை ஒழிக்கவில்லை. அமைச்சர் கே என் நேரு எப்போதும் உண்மை பேசக் கூடியவர்.. எனவே இன்பநிதிக்கு குழந்தை பிறந்தால் கூட அவர்களுக்கும் திமுக கொடி பிடிப்பதற்கு ஆள் இருப்பார்கள்.

2024 மக்களவை தேர்தல்
வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கக் கட்சித் தொண்டர்கள் எங்களை விட ஆர்வமாக உள்ளார்கள்.. நிறைய மக்கள் அதிமுகவிற்கு ஆதரவளிக்கின்றனர். திமுகவின் கடந்த இரண்டு ஆண்டு ஆட்சியால் கோபமடைந்துள்ள மக்கள் அதிமுகவிற்கு ஆதரவளிக்கின்றனர். எனவே., திமுக ஆட்சியில் எங்குப் பார்த்தாலும் கொலை, கொள்ளை, பலாத்காரம் நடக்கிறது. பெண்களுக்குப் பாதுகாப்பே இல்லாமல் என்ற நிலை உள்ளது. ரேஷன் கடைகளில் எந்த பொருட்களும் கிடைப்பதில்லை. இதனால் மக்கள் கோபத்தில் உள்ளனர். எங்கள் தலைமையிலான கூட்டணியில் யார் இருந்தாலும் நாங்கள்தான் வெற்றி பெறுவோம்" என்று அவர் தெரிவித்தார்..












Click it and Unblock the Notifications