அண்ணனை சந்திக்கும் தம்பி? மதுரை வரும் முதல்வர் ஸ்டாலின் உடன் மீட்டிங்? மு.க.அழகிரி சொன்ன பரபர தகவல்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் உங்களை சந்திப்பாரா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ளார் மு.க.அழகிரி.
மதுரை : வரும் மார்ச் மாதம் 5ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரைக்கு வரவிருக்கும் நிலையில், தனது சகோதரர் மு.க.அழகிரியைச் சந்திக்க இருப்பதாக ஒரு தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, முதலமைச்சர் மதுரைக்கு வருவதையே காலையில் தான் தெரிந்துகொண்டேன், என்னை சந்திப்பாரா என்பது எனக்கு தெரியாது என பதிலளித்துள்ளார் மு.க.அழகிரி.
2011 சட்டமன்றத் தேர்தலின் போது தாசில்தாரை தாக்கிய வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்ட 20 பேர் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், வழக்கு விசாரணை வரும் மார்ச் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கோர்ட்டுக்கு வெளியே வந்து காரில் ஏறிய மு.க.அழகிரியை செய்தியாளர்கள் சூழ்ந்துகொண்டு கேள்வி எழுப்பினர்.

தேர்தல் வாக்கு சேகரிப்பு
கடந்த 2011 ஏப்ரல் மாதம், சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள வெள்ளலூர் அம்பலக்காரன்பட்டி வல்லடிகாரர் கோயிலுக்குள், கிராமத் தலைவர்கள் மற்றும் பொதுமக்களுடன் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி ஆலோசனை நடத்தினார். அப்போது கோயில் கதவுகள் அடைக்கப்பட்டன. தேர்தலில் வாக்காளர்களுக்கு மு.க.அழகிரி பண பட்டுவாடா செய்வதாக அதிமுகவினர் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து மேலூர் தேர்தல் அதிகாரியும் தாசில்தாருமான காளிமுத்து மற்றும் தேர்தல் அலுவலர்கள், கேமராமேனுடன் அங்கு சென்று வீடியோ எடுத்தனர்.

அழகிரி ஆதரவாளர்கள் தாக்கியதாக புகார்
இதற்கு மு.க.அழகிரி தரப்பினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் தன்னை அடித்து, உதைத்ததாக தாசில்தார் காளிமுத்து கீழவளவு காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதனையடுத்து மு.க.அழகிரி, அப்போதைய மதுரை துணை மேயர் மன்னன் மற்றும் திமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளான ரகுபதி, திருஞானம், ஒத்தப்பட்டி செந்தில் உள்ளிட்ட 21 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் திருஞானம் இறந்து விட்டார்.

நேரில் ஆஜர்
இது தொடர்பான வழக்கு விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இன்று இந்த வழக்கு நீதிபதி நீலாபானு முன்பாக விசாரணைக்கு வந்தபோது முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, முன்னாள் துணை மேயர் மன்னன் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட 20 பேர் நேரில் ஆஜராகினர். இதனையடுத்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை மார்ச் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி.

முதல்வர் ஸ்டாலின் சந்திப்பாரா?
இதனையடுத்து நீதிமன்றத்திற்கு வெளியே மு.க.அழகிரி வந்து காரில் ஏறியபோது செய்தியாளர்கள் சூழ்ந்துகொண்டனர். மார்ச் மாதம் மதுரைக்கு ஆய்வுக்கு வரவிருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உங்களை சந்திப்பாரா என்பது குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மு.க.அழகிரி முதலமைச்சர் மதுரைக்கு வருவதையே இன்று காலையில் தான் தெரிந்துகொண்டேன், என்னை சந்திப்பாரா என்பது எனக்கு தெரியாது எனத் தெரிவித்தார்.

முதல்வர் ஸ்டாலின் மதுரை விசிட்
கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு பணி மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில், வரும் மார்ச் 5, 6ஆம் தேதிகளில் மதுரை மண்டலத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வுக்குச் செல்லத் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி மாவட்டங்களில் நடைபெற்று வரும் அரசுத் திட்டங்கள் பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சந்திப்பின்போது தனது சகோதரர் மு.க.அழகிரியை சந்திக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படும் நிலையில், தனக்கு அதுபற்றி தெரியாது எனத் தெரிவித்துள்ளார் மு.க.அழகிரி.












Click it and Unblock the Notifications