கடுமை காட்டிய மூத்த நீதிபதி! புகாரை தொடர்ந்து.. பி.வில்சன் குறித்த கருத்துக்கள் நீக்கம்
மதுரை: மதுரை உயர்நீதிமன்ற கிளையில், அண்மையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொடர்பான வழக்கு விசாரணையில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சனிடம், மூத்த நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் கடுமையாக நடந்து கொண்டது, சக வழக்கறிஞர்கள் மத்தியில் எதிர்ப்பை கிளப்பியிருந்தது.
அகில இந்திய பார்கவுன்சில்,கர்நாடக பார்கவுன்சில், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம், தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு உட்பட அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங்களும், வழக்கறிஞர்களை கண்ணியக்குறைவாக நடத்துவதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வரை கடிதம் அனுப்பியிருந்தனர்.

கடிதத்தில், "மூத்த வழக்கறிஞர் வில்சன் பற்றிய நீதிபதி ஆர்.சுப்பிரமணியனின் விமர்சனம் நியாயமானதாக இல்லை. நீதிபதி ஆர்.சுப்பிரமணியனின் விமர்சனம் நீதிபரிபாலனத்தை ஊக்குவிப்பதாக இல்லை.நீதிபதி செயல்பாடு குறித்து உயர்நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட புகார் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஐகோர்ட் அமைதி காப்பது, அதன் விதிமுறைகளை எதிர்காலத்தில் செயல்படுத்துவதை உறுதி செய்வதாக இல்லை.
நீதிமன்ற கண்ணியத்தை காக்கும் வகையில் நீதிபதிகள் நடந்து கொள்வது பற்றிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும். நீதிமன்றத்தில் கண்ணியத்துடன் கருத்துகளை தெரிவிப்பதை உறுதி செய்வதாக விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். நீதித்துறையினர் மீதான புகார்களுக்கு தீர்வு காணும் வழிமுறையை வகுக்கவும் கோரிக்கை வைக்கிறோம். உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் மேற்பார்வை குழு ஒன்றையும் அமைத்து நீதிமன்ற நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். வழக்கறிஞர்கள் அச்சமின்றி பணி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியிருந்தனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவில் வழக்கிலிருந்து தனி நீதிபதியை விலகுமாறு கேட்கவில்லை என்றும், மூத்த வழக்கறிஞர் மீதான கருத்துக்களை நீக்க வேண்டும் என்றும், நீதிமன்ற விசாரணை காட்சிகளை பதிவு செய்து வெளியிட்டவர் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் மற்றும் நீதிபதி விக்டோரியா கவுரி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது டிஎன்பிசி சார்பில் மூத்த வழக்கறிஞர் எஸ். பிரபாகரன் ஆஜராகி, இந்த வழக்கிலிருந்து நீதிபதி விலக வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் கேட்கவில்லை என்றும், நீதிமன்றத்தின் மேல் உரிய மரியாதை வைத்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.
மனுதாரர்கள் சொல்வதையே நீதிமன்றத்தில் கூற முடியும் என்றும் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி ஆர்.சுப்ரமணியன், நீதிமன்ற காட்சிகள் வெளியானது குறித்து சைபர் கமிட்டி விசாரணை நடைபெற்று வருவதாகவும், சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் விசாரித்து வருவதாக தெரிவித்தார். யார் பதிவு செய்தார்கள் என்பதை ஓரிரு நாட்களில் கண்டுபிடித்து விடுவோம் என குறிப்பிட்டார். அந்த வீடியோ காட்சிகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் குறித்த கருத்துகள் நீக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கை வேறு நீதிபதி முன்பு பட்டியலிட உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். இந்த விசாரணையின்போது, மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் நீதித்துறைக்காகவும், நீதிபதிகளின் ஓய்வு வயதை உயர்த்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதையும் மூத்த வழக்கறிஞரும் அகில இந்திய பார் கவுன்சில் துணைத் தலைவர் எஸ் பிரபாகரன் சுட்டிக்காட்டினார்.












Click it and Unblock the Notifications