என்னாது ஹாட்ரிக் வெற்றியா?.. அது அதிமுகவின் கனவாகவே இருக்கும்.. கனிமொழி எம்பி ஒரே போடு
மதுரை: ஹாட்ரிக் வெற்றி அதிமுகவின் கனவாக மட்டுமே இருக்கும் என மதுரையில் கனிமொழி எம்பி பேட்டி அளித்துள்ளார்.
மதுரையில் விடியலை நோக்கி ஸ்டாலின் என்ற தலைப்பில் 2வது நாளாக பிரச்சாரம் செய்து வரும் கனிமொழி எம்பி, செல்லூர் பகுதியில் இயங்கி வரும் கைத்தறி கூடத்தை பார்வையிட்டார். பின்னர் அங்கு தறி கூடத்தில் வேலை செய்து வரும் பெண்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, காலையில் செல்லூர் கன்மாயை பார்வையிட்டேன். அதோடு அப்பகுதி மக்களிடமும் குறைகளை கேட்டு அறிந்தேன். செல்லூர் பகுதிகளில் எந்த ஒரு அடிப்படை வசதியையும் செய்து தரவில்லை.

தூர்வார
நீர்நிலைகளை உண்மையாக துர்வார வேண்டும் எனக் பொதுமக்கள் கூறினார்கள். நான் உண்மையை ஏற்றுக் கொள்கிறேன் அவருடைய ஆட்சிக் காலத்தில்தான் நீர்நிலைகளை தூர்வார அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நேரில்
பேப்பர் அளவில் மட்டுமே நீர் நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளன. உண்மையில் நேரில் போய் தூர்வாரவில்லை. அதிமுக ஆட்சி காலத்தில் எய்ம்ஸ் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் உள்ளது. திமுக ஆட்சிக் காலத்தில்தான் மதுரை வளர்ச்சிக்காக ஆயிரத்து 500 கோடி அளவிற்கு ஒதுக்கீடு செய்துள்ளது.

தடுப்பு
மறைந்த கருணாநிதிக்கு இடம் ஒதுக்கீட்டில் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பதை யாரும் அவ்வளவு ஈஸியாக மறந்துவிட மாட்டார்கள். நாங்கள் மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம். விவசாயிகள் போராட்டத்திற்காக எதிர் நாட்டு வீரர்கள் உள்ளே வராதபடி அமைப்பது போன்ற தடுப்புகள் அமைக்கப்பட்டு கொண்டிருக்கிறது.

ஆட்சி மாற்றம்
இது ஜனநாயக நாட்டில் நடக்க கூடிய ஒன்றா? விவசாயிகளை போராட யாரும் தூண்டி விடவில்லை என்றார். அதிமுகவிற்கு இந்த தேர்தல் ஹாட்ரிக் வெற்றியாக அமையும் என அமைச்சர்கள் கூறி வருவது குறித்த கேள்விக்கு ஹாட்ரிக் வெற்றி அதிமுகவின் கனவாக மட்டுமே இருக்கும். மக்களின் மனநிலை ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளது என்றார்.