காரைக்குடி தொகுதியில் மாறும் களம்.. திமுக கூட்டணிக்கு சவால் அளிக்கும் தவெக நிர்வாகி! என்ன நடக்கிறது?
மதுரை: 2026 சட்டசபைத் தேர்தலில் காரைக்குடி தொகுதியில் தவெக வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. காரைக்குடி தொகுதி எப்போதும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்படுவதால், அதிமுகவும் பாஜகவுக்கு ஒதுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தவெக நிர்வாகி மருத்துவர் பிரபு இளைஞர்களின் ஆதரவுடன் மிகப்பெரிய சவால் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், ஒவ்வொரு கட்சியின் அத்தனை தொகுதிகளிலும் தீவிரமாக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே திமுக தரப்பில் வேட்பாளர் தேர்வு வரை கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தின் போதே கிட்டத்தட்ட வேட்பாளர்களை அறிமுகம் செய்துவிட்டார் என்று சொல்லலாம்.

இன்னும் சில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் சூழலில், அரசியல் கட்சிகள் மக்களிடையே தேர்தல் கருத்துக் கணிப்புகளையும் எடுக்க தொடங்கி இருக்கின்றன. திமுக தரப்பில் பென் நிறுவனம் மூலமாக ஒவ்வொரு மாதமும் கருத்துக் கணிப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் அதிமுக தரப்பில் ஐடி விங் மூலமாக கருத்துக் கணிப்புகள் எடுக்கப்படுகின்றன.
இந்த தேர்தலை பொறுத்தவரை புதிதாக களத்திற்கு வரும் தவெக பிரிக்கும் வாக்குகளால் இரு பெரிய கட்சிகளும் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு தொகுதிகளிலும் குறைந்தபட்சம் 10 ஆயிரம் வாக்குகள் வரை பிரிவதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. அதேபோல் தவெகவுக்கு சில தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்புகளும் அதிகரித்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
தவெக தலைவர் விஜய் எந்தத் தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்தாலும், காரைக்குடி தொகுதியில் தவெக மிக வேகமாக வளர்ந்து வருவதாக பார்க்கப்படுகிறது. காரைக்குடி தொகுதியை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சியே அதிகளவில் வென்றுள்ளன. இதுவரை 5 முறை காங்கிரஸ் வேட்பாளர்கள் வென்றிருக்கிறார்கள்.
அதனால் இம்முறை காங்கிரஸ் கட்சிக்கே அந்த தொகுதி திமுக கூட்டணியில் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. இந்த தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏ-வான மாங்குடி மற்றும் கேஆர் ராமசாமி இடையில் ஒருவருக்கு போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. அதேபோல் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு இந்த தொகுதி ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
எச்.ராஜா போட்டியிட விரும்பவில்லை என்றால், வேறு ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். கடந்த தேர்தலில் அமமுக மற்றும் நாதக ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளை பெற்றனர். இம்முறை அந்த வாக்குகளை தவெக அள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் தவெக மாவட்டச் செயலாளர் மருத்துவர் பிரபு தீவிரமாக பணியாற்றி வருகிறார்.
மருத்துவமனை, பெட்ரோல் பங்க் உள்ளிட்ட தொழில்களை செய்து வருவதால், அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு இருக்கிறது. அதேபோல் காரைக்குடியில் பெரும்பான்மையாக இருக்கும் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர். இளைஞர்களின் ஆதரவும், உள்ளூர் தொடர்புகளையும் வைத்து பார்க்கும் போது, திமுக கூட்டணி வேட்பாளருக்கு மிகப்பெரிய சவாலாக பிரபு இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications