கொடநாடு விவகாரம்... இங்கிலீஷ் திகில் படங்களை மிஞ்சிவிட்டது... மர்மம் விலகுமா..? -கார்த்தி சிதம்பரம்
மதுரை: கொடநாடு கொலை-கொள்ளை வழக்கை பார்த்தால் ஆங்கில திகில் படங்களை மிஞ்சும் அளவுக்கு செல்வதாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயயலிதா உயிருடன் இருந்த வரை அவ்வப்போது ஓய்வெடுப்பதற்காக கொடநாடு எஸ்டேட் செல்வது வழக்கம். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே அமைந்துள்ள இந்த எஸ்டேட் ஆனது இயற்கை எழில் கொஞ்சும் வகையில் பசுமையாக காட்சியளிக்கக் கூடியது.

சென்னையின் சூடான வானிலை காரணமாக தோழி சசிகலாவுடன் ஓய்வெடுப்பதற்காக அவ்வப்போது கொடநாடு புறப்பட்டுச் சென்று அங்கு தாம் விரும்பும் வரை ஓய்வெடுப்பது ஜெயலலிதாவின் வழக்கமாக இருந்தது. மேலும், கொடநாடு எஸ்டேட் பங்களா முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் முகாம் அலுவலகமாகவும் இயங்கியது.
இதனால் போயஸ் கார்டனுக்கு அடுத்தபடியாக கொடநாடு பங்களாவும் அதிமுகவினர் மத்தியில் நன்கு பரிச்சயம் பெற்றிருந்தது. கொடநாடு எஸ்டேட்டிற்கு செல்லும் போதெல்லாம் பேட்டரி காரில் அமர்ந்து உள்ளுக்குள்ளேயே வலம் வருவது ஜெயலலிதாவின் வழக்கம். இப்படி பல்வேறு பெருமைகளை கொண்ட கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது.
ஜெயலலிதாவுக்கு தொடர்புடைய இடத்தில் நடைபெற்ற இச்சம்பவம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சம்பவம் நடைபெற்ற அன்று அங்கு சிசிடிவி கேமரா இல்லாதது அரசியல் கட்சி தலைவர்களின் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியது.
இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக இவ்வழக்கு நீலகிரி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கொடநாடு வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் சயானிடம் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து அதிமுகவின் முக்கியப் புள்ளி ஒருவர் இதில் தொடர்புப்படுத்தி பேசப்பட்டார். இருப்பினும் இன்னும் அதிகாரப்பூர்வமாக இவ்வழக்கில் இந்நார் தான் இதற்கு காரணம் என கண்டறியப்படவில்லை.
இதனிடையே மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் எம்.பி., கொடநாடு கொலை மற்றும் கொள்ளை விவகாரத்தை பார்க்கும் போது ஆங்கில மர்ம படங்களை மிஞ்சும் வகையில் உள்ளதாக தெரிவித்திருக்கிறார்.
மேலும், கொடநாட்டில் சொத்து வாங்கப்பட்டது முதல் ஜெயலலிதா மரணம், எஸ்டேட்டில் கொலை, கொள்ளை என எல்லாமே மர்மமாக உள்ளதாக கூறியிருக்கிறார். கொடநாடு எஸ்டேட் தொடர்புடைய வழக்கில் அனைத்து உண்மைகளும் வெளிவர வேண்டும் என்றும் கார்த்தி சிதம்பரம் தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications