39 பேர் உயிரிழப்பு எதேச்சையான விபத்து இல்லை.. திட்டமிட்ட சதி - நீதிபதியிடம் தவெக மனு
சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காவல்துறை விதித்த நிபந்தனைகளை தவெக பின்பற்றவில்லை என்கிற புகாரை திமுக முன் வைத்து வருகிறது. சம்பவம் தொடர்பாக தவெக சார்பில் உயர் நீதிமன்ற நீதிபதியை சந்தித்து முறையிட்டனர். திட்டமிட்ட சதி என்று நீதிபதியிடம் தவெக மனு அளித்துள்ளது. இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நாளை மதியம் விசாரணைக்கு வரவுள்ளது.
கரூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் நேற்று இரவு பிரச்சாரம் செய்தார். அப்போது திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி தற்போதுவரை 39 மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 9 குழந்தைகள், 17 பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் மீது புகார்
பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, முதலமைச்சர் ஸ்டாலின், பல மாநில முதலமைச்சர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள், விஜய் கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்குவதில் தொடங்கி பாதுகாப்பு நடவடிக்கைகள் செய்யவில்லை என்று பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன.
தவெக சார்பில் அனுமதி கேட்ட இடம் ஒன்று, அவர்கள் அனுமதி கொடுத்த இடம் ஒன்று அந்தக் கட்சியினர் கூறுகிறார்கள். தமிழ்நாடு அரசின் செயல்பாடு குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் விமர்சித்துள்ளனர். மறுபக்கம் தவெகவினர் காவல்துறையினர் விதிகளை மீறியது, விஜய் தாமதமாக வந்தது தான் விபத்திற்கு காரணம் என்று திமுக குற்றம் சாட்டி வருகிறது.
தவெக ஆலோசனை
இதுதொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார், மாவட்ட செயலாளர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. தவெக சார்பில் எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விஜய் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த தவெக வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த அறிவழகன், "பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தவெக என்றும் துணை நிற்கும். விஜய் மிகப்பெரிய துன்பத்தில் இருக்கிறார். காவல்துறை விதித்த நிபந்தனைகளை நாங்கள் மீறவில்லை. விஜய்யின் அடுத்தக்கட்ட பிரச்சாரம் உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை முடிவு செய்யப்படும்." என்று கூறியிருந்தார்.
நீதிமன்றத்தில் விசாரணை
இந்நிலையில் கரூர் சம்பவம் தொடர்பாக தவெகவினர் ஆலோசனை நடத்தினார்கள். அதன்படி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தண்டபாணியை அவரின் இல்லத்தில் சந்தித்து, நீதிமன்றம் தாமாக முன்வந்து சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், சிசிடிவி கேமராக்களை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைக்க முடிவு செய்தனர். இந்த சம்பவம் திட்டமிட்ட சதி என்று கூறி நீதிபதியிடம் மனு அளித்துள்ளனர்.
சற்று முன்பு தவெக துணைப்பொதுச்செயலாளர் நிர்மல்குமார், வழக்கறிஞர் அறிவழகன் ஆகியோர் நீதிபதி தண்டபாணியை சந்தித்து கோரிக்கைகளை முன்வைத்தனர். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நிர்மல் குமார், எங்கள் தரப்பு தகவல்களை சொல்லியுள்ளோம். இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நாளை மதியம் 2.15 மணியளவில் வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.
வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் இதைப்பற்றி வேறு எதுவும் கூற முடியாது. நீதிமன்றம் உத்தரவைப் பொறுத்து எங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதன்படி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் தண்டபாணி, ஜோதிராமன் ஆகிய 2 நபர்கள் கொண்ட அமர்வில் வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications