உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முதல் பெண் சோப்தாராக லலிதா நியமனம்
மதுரை: உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முதல் பெண் சோப்தாராக லலிதா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நீதிபதி மாலாவுக்கு சோப்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக பெண்கள் கால்பதித்து வருகின்றனர். நீதித் துறையிலும் பல்வேறு பணியிடங்களில் பெண்கள் அதிகளவில் பணிபுரிந்து வருகின்றனர். உயர் நீதிமன்ற நீதிபதிகள் தங்களது சேம்பரில் இருந்து நீதிமன்ற அறைக்குச் செல்லும்போது அவர்களுக்கு முன்பாக 'சோப்தார்' எனப்படும் உதவியாளர்கள் வெள்ளைநிற சீருடை மற்றும் சிவப்பு நிற தலைப்பாகை அணிந்து, மரியாதை நிமித்தமாகவும், நீதிபதிகளின் வருகையை உணர்த்தும் விதமாகவும் செங்கோலை ஏந்தியபடி முன்னே செல்வர்.
அந்த நேரத்தில், வழக்கறிஞர்கள், அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட எல்லோருமே நீதிபதிக்கு வழிவிட்டு, ஓரமாக நின்று வணக்கம் தெரிவிப்பது மரபாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. வெள்ளி செங்கோல் நீதிபதியின் அறைக்கு முன்பு வைக்கப்பட்டிருந்தால், அந்த அறையின் உள்ளே நீதிபதி இருக்கிறார் என்று அர்த்தம்.
வெள்ளை நிறச் சீருடையுடன், தேசிய சின்னம் பொறிக்கப்பட்ட சிவப்பு நிற தலைப்பாகை, வயிற்றுப் பகுதியில் சிவப்பு நிற பட்டையை சோப்தார் அணிந்திருப்பார். நீதிபதியின் உதவியாளராகக் கருதப்படும் இந்த சோப்தார், பணி முடிந்து திரும்பும்வரை நீதிபதி இருக்கும் இடத்திலேயே இருப்பார்.
கள்ளழகர் கோவில் நிலத்தை ரூ.34 கோடிக்கு விலை பேசிய பாஜக நிர்வாகி..கைது செய்த விருதுநகர் போலீஸ்
தற்போது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பெண் சோப்தார், உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளாவின் அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்கள் நீதிபதிகளுக்கு தேவையான சட்டப் புத்தகங்கள், வழக்கு தொடர்பான கோப்புகளை எடுத்துத் தருவது என நீதிபதிகளின் அன்றாடப் பணிகளையும் செய்கின்றனர். இதுவரை ஆண்கள் தான் சோப்தார்களாக நிமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்றம் சார்பில் கடந்தாண்டு 40 சோப்தார் பணியிடங்களை நிரப்புவதற்காக எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. இதில் உயர் நீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக பெண் நீதிபதிகளுக்கு பெண் சோப்தார் நியமிக்கும் வகையில் 20 பெண் சோப்தார்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் பெண் சோப்தாராக திலானி என்பவர் கடந்தாண்டு பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முதல் பெண் சோப்தாராக லலிதா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நீதிபதி மாலாவுக்கு சோப்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரையை சேர்ந்த இவர் சோப்தார் பணியில் சேர்ந்தது பெருமையாக இருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.