காலியாகும் கல்லீரல்.. லிவர் மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருப்போர் லிஸ்ட்.. கேட்கும் மதுரை ஐகோர்ட்
மதுரை: கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த உத்தரவிடக்கோரிய வழக்கில், தமிழக உறுப்பு மாற்று ஆணையத்தின் செயலர் பதில் மனுத்தாக்கல் செய்ய மதுரை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.. கல்லீரல் உறுப்பு மாற்று சிகிச்சைக்காக பதிவு செய்து காத்திருப்பவர்களின் பட்டியலை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
மதுரை கே.கே. நகரை சேர்ந்தவர் வெரோனிக்கா மேரி.. இவர் உயர் நீதிமன்றமதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
மூளைச்சாவு: தமிழகத்தில் மூளைச்சாவு அடைவோரிடம் இருந்து தானமாகப் பெறப்படும் கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகளை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்குத் பொருத்த தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தக் கோரி, உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில், தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் 3 ஆண்டுகளுக்குள் கல்லீரல் மாற்று சிகிச்சை மேற்கொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 7 ஆண்டுகளாகியும், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை.
உறுப்பு மாற்று சிகிச்சைகள்: தமிழகத்தில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை உட்பட 6 அரசு மருத்துவமனைகள், 48 தனியார் மருத்துவமனைகள் அனுமதி பெற்றுள்ளன.
இதுவரை 1,500-க்கும் மேற்பட்ட கல்லீரல்கள் தானமாகப் பெறபட்டுள்ளன. இதில் 94 கல்லீரல்கள் மட்டுமே அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது. இதில் 91 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் நடைபெற்றுள்ளன மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஒரு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகூட நடைபெறவில்லை.
ஆபரேஷன்: உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை திட்டம் தொடங்கப்பட்டு 15 ஆண்டுகளாகியும் மதுரை அரசுமருத்துவமனையில் ஒரு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகூட நடைபெறவில்லை.
அதேநேரத்தில், மதுரையைச் சுற்றியுள்ள பல தனியார் மருத்துவமனைகளில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன. எனவே, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கல்லீரல்மாற்று அறுவை சிகிச்சைக்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
நீதிபதிகள்: இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கௌரி அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதற்கு அரசுவழக்கறிஞர் "மதுரை அரசு மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன" என்று வாதிட்டனர்.
உடனே மனுதாரர் வழக்கறிஞர், "மதுரையில் ஏராளமானோர் கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சைக்காக பதிவு செய்து காத்திருக்கின்றனர். ஆனால், இதுவரை ஒரு அறுவை சிகிச்சைகூட நடைபெறவில்லை" என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், "தமிழக அரசு மருத்துவமனைகளில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக இதுவரை எத்தனை பேர் பதிவு செய்திருக்கின்றனர்? என்பது தொடர்பான பட்டியலை, உடல் உறுப்பு மாற்றுஆணைய உறுப்பினர் செயலர் தாக்கல் செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டு, இந்த விசாரணையை செப்டம்பர் 11-க்கு தள்ளிவைத்தனர்.












Click it and Unblock the Notifications