நகை அடமானம் வைத்து விவசாயிகள் பெற்ற பயிர்க் கடனும் தள்ளுபடி.. அமைச்சர் செல்லூர் ராஜு ஹேப்பி நியூஸ்
மதுரை: நகையை வைத்து பயிர்கடன் பெற்றவர்களுக்கும் கடன் தள்ளுபடி உத்தரவு செல்லுபடியாகும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் நேற்று 110வது விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
அதன்படி கூட்டுறவு சங்கங்களில் விவசாய கடன் பெற்ற ரூ.12,110 கோடி மதிப்பிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது. இதன் காரணமாக சுமார் 16 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்றார் முதல்வர்.

அதிரடி அறிவிப்பு
இந்த அறிவிப்பு பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி உள்ளது. சிறு குறு விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். புயல், பருவம் தவறிய மழை போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருந்த விவசாயிகள் பெரிய மகிழ்ச்சியடைந்தனர்.

விவசாயிகள் சந்தேகம்
ஆனால் பல்வேறு விவசாயிகளும் தாங்கள் நகைகளை வைத்துப் அடமானமாக வைத்து பெற்ற பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும் பட்டியலில் இருக்கிறதா என்று சந்தேகம் எழுந்தது.

தெளிவு இல்லை
இதுபற்றி நேற்று கூட்டுறவு அதிகாரிகளிடம் விசாரித்தபோது அவர்களிடம் தெளிவான ஒரு பதில் இல்லை. முதல்வர் உத்தரவில் அது போன்ற அம்சம் இல்லை என்று மட்டும் தெரிவித்திருந்தனர். ஆனால் இன்று மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ அளித்த பேட்டியில் இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

விவசாயிகள் மகிழ்ச்சி
அவர் கூறுகையில், ஆவணங்கள் மட்டுமின்றி நகைகளை வைத்து பயிர் கடன் பெற்ற விவசாயிகளின் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும். இவ்வாறு அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். இதனால் அனைத்து தரப்பு விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications