நீங்க உள்ளே வராதீங்க.. மதுரையில் பிரச்சாரத்திற்கு சென்ற பாஜக வேட்பாளர்.. திருப்பி அனுப்பிய மக்கள்!
மதுரை: மதுரையில் வாக்கு சேகரிக்கச் சென்ற பாஜக வேட்பாளர் மற்றும் கட்சியினரை பொதுமக்கள் விரட்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரங்கள் தமிழ்நாடு முழுக்க தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுகிறது.
கோவா.. தொங்கு சட்டசபை வந்தால் காங்கிரசுடன் கூட்டணியா? என்ன சொல்கிறார் ஆம் ஆத்மி கெஜ்ரிவால்?
அதிமுகவுடன் கூட்டணி முறிந்ததால் தமிழ்நாடு முழுக்க வேட்பாளர்களை களமிறக்கி பாஜக தனித்து போட்டியிடுகிறது. இதற்காக பாஜக தீவிர பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது.
வித்தியாசமான பிரச்சாரம்
இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பல இடங்களில் வித்தியாசமான பிரச்சாரங்கள் நடந்து வருகின்றன. சில இடங்களில் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக சிலர் முதல்வர் ஸ்டாலின் வேடத்தில் வாக்கு கேட்டு வருகின்றனர். அதேபோல் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் வேடத்திலும், ஜெயலலிதா வேடத்திலும், கருணாநிதி வேடத்திலும் பல இடங்களில் வேட்பாளர்கள் வாக்கு கேட்டு வருகின்றனர். பாஜக தலைவர் அண்ணாமலையும் தோசை சுட்டு, துணிகளை அயர்ன் செய்து சுவாரசிய பிரச்சாரம் செய்து வருகிறார்
மதுரை வேட்பாளர்
இந்த நிலையில்தான், மதுரையில் பாஜக வேட்பாளர் ஒருவர் பர்தா அணிந்து வாக்கு கேட்க சென்றார். மதுரை மாநகராட்சி 54 வது வார்டில் இஸ்லாமியர் அதிகம் வசிக்கின்றனர். இந்த வார்டில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக மெகருநிஷா போட்டியிடுகிறார். இன்று காஜிமார் பெரிய பள்ளிவாசல் பகுதியில் தனது ஆதரவாளர்கள் ஐந்து பேருடன் வாக்கு சேகரிக்க வந்துள்ளார்.
வாக்கு சேகரிக்க சென்றனர்
அப்போது அப்பகுதியை சேர்ந்த சிலர் திடீரென அவர்களை வழிமறித்துள்ளனர். இதையடுத்து பாஜகவை சேர்ந்தவர்கள் இந்த பகுதியில் வாக்கு சேகரிக்க வரக்கூடாது என்று குறிப்பிட்டனர். தொடர்ந்து மெகருநிஷா மற்றும் அவர்களது ஆதரவாளர்களை உடனடியாக திரும்பிச் செல்லுமாறு சுமார் 20க்கும் மேற்பட்டோர் வேட்பாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த போலீசார் கொதிப்பாக இருந்த மக்களை சமாதானம் செய்தனர்.
பிரச்சாரம்
பாஜக எங்களுக்கு எந்த விஷயத்திலும் ஆதரவாக இல்லை. வாக்கு மட்டும் கேட்க வருவது நியாயமா என்று அங்கிருந்த மக்கள் பாஜக வேட்பாளர் மெகருநிஷாவிடம் கேட்டனர். இதற்கு அந்த வேட்பாளர்.. நீங்கள் இப்போது இப்படி தேவையில்லாமல் பேச வேண்டாம் என்று குறிப்பிட்டார். அதற்கு அங்கு இருந்த இஸ்லாமிய மக்கள்.. இந்தியாவில் பல விஷயம் தேவை இல்லாமல் நடக்கிறது அதை போய் முதலில் கேளுங்கள் என்று கூறி அவரிடம் நீண்ட வாக்கு வாதம் செய்தனர். கடைசியில் போலீசார் அங்கிருந்தவர்களை சமாதானம் செய்து மெகருநிஷாவை பிரச்சாரம் செய்ய வேறு சாலைக்கு அழைத்து சென்றனர்.