அமைச்சர்கள் ஆப்சென்ட்.. டக்கென களத்தில் இறங்கிய மனோ தங்கராஜ்.. ‘தல’ பிளானே இதானாமே? பாஜக அப்செட்!
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை வரவேற்க அமைச்சர்களில் மனோ தங்கராஜ் மட்டுமே சென்றார்.
மதுரை : குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, தமிழ்நாட்டுக்கு வருகை தந்த நிலையில், மதுரை விமான நிலையத்தில் அவரை வரவேற்க மதுரையைச் சேர்ந்த அமைச்சர்கள் செல்லவில்லை. கன்னியாகுமரியைச் சேர்ந்த அமைச்சர் மனோ தங்கராஜ் மட்டுமே சென்றார். இதுவே பாஜகவை எரிச்சலுக்கு உள்ளாக்கும் திமுகவின் திட்டம் தான் என்ற பேச்சுகளும் எழுந்துள்ளன.
வழக்கமாக மதுரைக்கு அரசு சார்பாக யார் வருகை புரிந்தாலும், மதுரையைச் சேர்ந்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அல்லது அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோரில் ஒருவர் அல்லது இருவருமே சென்று வரவேற்பார்கள்.
ஆனால் இந்த முறை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை தமிழ்நாடு அரசு சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் மனோ தங்கராஜ் வரவேற்றார்.

மதுரை வந்த முர்மு
குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்ற பின்பு, முதன்முறையாக தமிழ்நாட்டுக்கு வருகை தந்த திரௌபதி முர்மு, மீனாட்சி அம்மன் கோவிலில் வழிபாடு செய்ய நேற்று காலை 11 மணியளவில் மதுரைக்கு வந்தார். மதுரைக்கு வந்த குடியரசுத் தலைவரை விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மேயர் இந்திராணி உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் முடித்து, சர்க்யூட் ஹவுஸில் ஓய்வெடுத்த திரௌபதி முர்மு, பிற்பகலில் விமானம் மூலம் கோவைக்குச் சென்றார்.

கோவை ஈஷா
கோவையில் ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் தலைமை விருந்தினராக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பங்கேற்றார். ஈஷா யோகா மையத்தின் ஜக்கி வாசுதேவ், குடியரசுத் தலைவருக்கு மாலை அணிவித்து வரவேற்றார். இதையடுத்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பேட்டரி காரில் ஈஷா யோகா மையத்தை சுற்றிப் பார்த்தார். அப்போது குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர். வேறு தமிழ்நாட்டு அமைச்சர்கள் யாரும் பங்கேற்கவில்லை.

அமைச்சர் மனோ தங்கராஜ் மட்டுமே
வழக்கமாக மதுரைக்கு அரசு சார்பாக யார் வருகை புரிந்தாலும், மதுரையைச் சேர்ந்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோரில் ஒருவரோ அல்லது இருவருமே சென்று வரவேற்பார்கள். அதேபோல, கோவைக்கு அரசுமுறை பயணமாக யாரேனும் வந்தால், கோவை பகுதியைச் சேர்ந்த அமைச்சர்கள் பங்கேற்பார்கள். ஆனால் இந்த முறை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் மனோ தங்கராஜ் வரவேற்றார்.

லோக்கல் அமைச்சர்கள் மிஸ்ஸிங்
மதுரை வந்த குடியரசுத் தலைவரை உள்ளூர் அமைச்சர்களான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், பி.மூர்த்தி ஆகியோர் வரவேற்கச் செல்லாததும், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டு குடியரசுத் தலைவரை வரவேற்றது குறித்தும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்றதால் அவர் வரவேற்பு நிகழ்வில் பங்கேற்கவில்லை. அதேசமயம் அமைச்சர் பி.மூர்த்தி, ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்தார்.

திட்டமிட்டே வெறுப்பேற்றி இருக்கிறதா
இதுமட்டுமல்ல, குடியரசுத் தலைவரை வரவேற்று வழியனுப்பிவைக்கும் நிகழ்வுக்கு, அமைச்சர் மனோ தங்கராஜை அனுப்பி வைத்ததன் மூலம் திமுக தலைமை, தமிழ்நாடு பாஜகவை திட்டமிட்டே வெறுப்பேற்றியிருக்கிறது என்கிறார்கள் திமுகவினர். பாஜகவினரும், அமைச்சர் மனோ தங்கராஜை மட்டும் அனுப்பி வைத்ததற்கு கண்டனங்களையும் பதிவு செய்துள்ளனர். நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவரை வரவேற்க ஒரே ஒரு அமைச்சரை மட்டும் அனுப்பி இருப்பதை பாஜக கண்டித்துள்ளது.

பாஜக கண்டனம்
"தமிழ்நாட்டிற்கு முதன்முறையாக ஜனாதிபதியாக வந்த திரெளபதி முர்முவை வரவேற்க இந்த விடியலுக்கோ சகாக்களுக்கோ மனமில்லை. இத்துப்போன திராவிட மாடலின் செத்துப்போன சமூக நீதி. விடியல் அரசு ஜனாதிபதியை வரவேற்கவும், இந்து கோவில்களுக்கும், இந்து வழிபாட்டுத் தலங்களுக்கும் வேண்டுமென்றே தான் அமைச்சர் மனோ தங்கராஜை அனுப்புகிறது. சிவராத்திரிக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம்?" என பாஜகவைச் சேர்ந்த செயற்குழு உறுப்பினர் சௌதா மணி கேள்வி எழுப்பி இருந்தார்.

மனோ தங்கராஜ் - பாஜக எதிர்ப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜை பாஜகவினர் மற்றும் இந்து அமைப்பினர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். அமைச்சர் என்ற முறையில் மண்டைக்காடு திருவிழாவில் தேர் வடம்பிடிக்க வந்த மனோ தங்கராஜுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். அங்கு நடக்கவிருந்த இந்து சமய மாநாட்டை நடத்த விடாமல் தடுத்ததாகவும் அமைச்சர் மனோ தங்கராஜ் மீது பாஜகவினர் புகார் அளித்தனர்.

பாஜகவுக்கு செக்
ஏற்கெனவே குமாரகோவில் தேரோட்டத்தின் போது அமைச்சர் மனோ தங்கராஜும், மாற்று மதத்தினரும் விதிகளை மீறிச் செயல்பட்டனர் என்றும் பாஜகவினர் குற்றம்சாட்டினர். தொடர்ந்து மனோ தங்கராஜுக்கு எதிராக பாஜகவினர் குற்றச்சாட்டுகளை அடுக்கி வரும் சூழலில், குடியரசுத் தலைவரை வரவேற்கவும், அவருடனேயே மீனாட்சியம்மன் கோவிலுக்குள் செல்லும் வகையிலும் மனோ தங்கராஜ் இடம்பெறும் வகையில் அவரை அனுப்பியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின் என்கிறார்கள் திமுகவினர்.












Click it and Unblock the Notifications