கால் விரலில் காயம்! சிறிய அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட மு.க.அழகிரி! மதுரை இல்லத்தில் ஓய்வு!
மதுரை: முன்னாள் மத்திய அமைச்சரும் திமுகவின் முன்னாள் தென் மண்டல அமைப்புச் செயலாளருமான மு.க.அழகிரிக்கு கால் விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக சிறிய அறுவைச் சிகிச்சை ஒன்று அண்மையில் நடைபெற்றிருக்கிறது.
இதன் காரணமாக தான் ஆகஸ்ட் 7-ஆம் தேதி அன்று சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்துக்கு கூட அவரால் செல்ல முடியவில்லையாம்.
மதுரை சத்யசாய் நகரில் உள்ள தனது வீட்டில் தற்போது முழு ஓய்வெடுத்து வருகிறார் மு.க.அழகிரி.
திமுகவில் திடீர் பரபரப்பு- முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சந்திக்கிறார் அண்ணன் மு.க.அழகிரி?
கருணாநிதி நினைவுநாள்
கருணாநிதியின் நினைவுநாளான ஆகஸ்ட் 7-ஆம் தேதி அன்று சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் மொத்த குடும்ப உறுப்பினர்களும் ஆஜராகி அவருக்கு மரியாதை செலுத்தினர். முதலமைச்சர் ஸ்டாலின் வந்து சென்ற பிறகு துர்கா ஸ்டாலின், செல்வி, அமிர்தம், குணாநிதி, அறிவுநிதி என பேரன் பேத்திகள் வரை கருணாநிதியின் நினைவிடத்துக்கு சென்று மலரஞ்சலி செலுத்தினர்.
கால் விரலில் காயம்
ஆனால் மு.க.அழகிரியை மட்டும் அங்கு பார்க்க முடியவில்லை. கருணாநிதியின் நினைவிடத்துக்கு அவர் வராததற்கு என்ன காரணம் என நாம் அழகிரியின் தீவிர ஆதரவாளர் ஒருவரிடம் நாம் விசாரித்ததில், அவருக்கு கால் விரலில் அண்மையில் காயம் ஏற்பட்டதும் அதற்கு சிறிய அறுவைச் சிகிச்சை செய்துகொண்டார் என்ற தகவலும் கிடைத்தது. இதனால் தான் அவரால் சென்னைக்கு பயணிக்க முடியவில்லை எனக் கூறினார் அந்த நபர்.
வீட்டில் அஞ்சலி
மதுரை சத்யசாய் நகரில் உள்ள தனது வீட்டிலேயே கருணாநிதியின் படத்துக்கு மு.க.அழகிரி மலர்கள் தூவி மரியாதை செலுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மகன் துரை தயாநிதி சென்னையில் குடியேறியிருப்பதால் மதுரை சென்னை என மாதத்தின் பாதி நாட்களை அங்கும் இங்குமாக கழித்து வருகிறாராம் மு.க.அழகிரி. ஒரு காலத்தில் மு.க.அழகிரியின் அறிமுகம் கிடைக்காதா என தென் மாவட்ட திமுக பிரமுகர்கள் பலரும் காத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
விசுவாசிகள் சந்திப்பு
மு.க.அழகிரியை அவரது இல்லம் தேடி சந்திக்கும் விசுவாசிகள் கட்சிக்கு அப்பாற்பட்டு இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர் மத்திய அமைச்சராக இருந்த போதும், திமுகவில் அதிகாரமிக்கவராக வலம் வந்த போதும் மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி மாவட்டங்களில் அவரால் பலன் அடைந்தவர்கள் ஏராளம் என்பது குறிப்பிடத்தக்கது.