பேட் கேர்ள் டீசரை பார்க்க சகிக்கலை..அத்தனை வக்கிரம்! வெற்றிமாறன் மீது போக்சோ கேஸ்..கோர்ட்டில் வழக்கு
மதுரை: சிறுவர், சிறுமிகள் ஆபாசமாக இருப்பது போன்ற ஆபாசமான காட்சிகள் உள்ளதாக பேட் கேர்ள் படத்தின் டீசரை யூட்யூபில் இருந்து நீக்க கோரி வழக்குத் தொடரப்பட்ட நிலையில், மத்திய அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டதால் வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் கிளை உத்தரவிட்டுள்ளது.
அனுராக் காஷ்யப், இயக்குனர் வெற்றிமாறன் இணைந்து கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி மூலம், பேட் கேர்ள் என்ற படத்தை தயாரித்துள்ளனர். வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய வர்ஷா பாரத் இப்படத்தை இயக்கியுள்ளார்.

அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, ஹ்ரிது ஹருண், டிஜே அருணாசலம் மற்றும் சரண்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. இயக்குனர் வெற்றிமாறன் உள்ளிட்டோர் டீசரை வெளியிட்டனர்.
பள்ளியில் படிக்கும் டீன் ஏஜ் பருவ பெண்ணின் ஆசைகள், எதிர்பார்ப்புகள், முதல் காதல், முதல் முத்தம் என இளமை கனவுகளையும் பெற்றோரின் கட்டுப்பாடு அவர்களை விட்டு பிரிந்து தனியாக வாழும் வாழ்க்கை, அவளது காதல் தேர்வுகள் என ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கையை குறித்து விவரிப்பதாக படம் எடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என படம் எடுக்கப்பட்டு இருப்பதாகவும், படத்தில் பிராமண சமுதாயத்தை சேர்ந்த பெண்ணாக அவர் சித்தரிக்கப்பட்டு இருப்பதாக சிலர் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், சிறுவர், சிறுமிகள் ஆபாசமாக இருப்பது போன்ற ஆபாசமான காட்சிகள் உள்ளதாக பேட் கேர்ள் படத்தின் டீசரை யூட்யூபில் இருந்து நீக்க கோரி வழக்குத் தொடரப்பட்டது. மதுரை வெங்கடேஷ் , ரமேஷ் குமார் ராம்குமார் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில்," 26.01.2025 ,அன்று யூடியூப் இணையத் தில் பேட் கேர்ள் என்ற திரைபடத்தின் டீசர் வெளியானது.இந்த டீசரில் சிறுவர், சிறுமி ஆபாசமாக இருப்பது போன்ற ஆபாசமான காட்சிகள் உள்ளன. இந்த டீசர் தற்போதும் ஆன் லைனில் உள்ளது.
இது போன்ற காட்சிகள் குழந்தை ஆபாசம் மற்றும் குழந்தை பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகம் ஆகும். இது பாலியல் குற்றமாகும். எனவே இந்த ஆபாசமான டீசரை சமூக ஊடகங்களில் இருந்து நீக்க உத்தரவிட வேண்டும். மேலும் சிறுவர் சிறுமியர் பாலியல் காட்சிகளை வெளியிட்ட கூகுள் நிறுவனம் பட இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுத்து போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறி உள்ளார்.
இந்த மனு நீதிபதி தனபால் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இந்த டீசரை சமூக ஊடகங்களில் இருந்து அகற்றுவதற்கு, யாருக்கு உத்தரவிட வேண்டும் என்பது தெளிவாக இல்லை. டீசரை வெளியிட்ட, தயாரித்த நபர்கள் மீது காவல் நிலையத்தில் தனிப்பட்ட புகார் ஏன் கொடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.
அப்போது மனுதாரர் , தனிப்பட்ட ஒரு நபருக்கான பாதிப்பு இல்லை. எனவே ஒட்டு மொத்த இளம் மாணவ பருவத்திற்கான பாதிப்பு. எனவே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். என கூறினார். இதை தொடர்ந்து , மத்திய அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. எனவே,வழக்கு விசாரணையை வருகிற 20 ம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications