'ஹைகோர்டாவது...' பேசிய ஹெச் ராஜா மீது 2 மாதத்தில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
மதுரை: ஹைகோர்டாவது ... ஆவது என்று சொன்ன விவகாரத்தில் பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா மீது 2 மாதத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடந்தது. அந்த ஊர்வலதல் ஹெச் ராஜா பங்கேற்றார். அப்போது போலீசுக்கும் ராஜாவுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது ஊர்வலம் குறித்து சென்னை ஹைகோர்ட் விதித்திருக்கும் கட்டுப்பாடுகள் குறித்து போலீசார் கூறியபோது, ஹெச் ராஜா ஹைகோர்ட் ஆவது..... ஆவது என தகாத வார்த்தைகளால் திட்டினார். மேலும் போலீசார் லஞ்சம் வாங்கிக்கொண்டு செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.

மன்னிப்பு கேட்டார்
இந்த வீடியோ அப்போது சமூக வலைதளங்களில் வைரலாகியது. சென்னை உயர்நீதிமன்றம் இந்த விவகாரத்தை தானாக முன்வந்து விசாரணை நடத்தியது.. அப்போது ஹெச். ராஜா நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரினார். இதனால் அந்த விவகாரம் அப்போது முடித்து வைக்கப்பட்டது.

ராஜா மீது வழக்கு
இதனிடையே, ஹைகோர்டையும் போலீசையும் அவதூறாகப் பேசியதாக ஹெச் ராஜா உள்ளிட்ட 8 பேர் மீது திருமயம் போலீஸ் ஸ்டேசனில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சட்டத்தை மதிக்காதது, இரு தரப்பினருக்கு இடையே மோதலை தூண்டுவது, நீதிமன்றத்தை பற்றி அவதூறாக பேசியது உள்ளிட்ட பல பிரிவுகளின் போடப்பட்ட வழக்கு தற்போதுவரை திருமயம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.

ஹைகோர்டில் வழக்கு
இந்த நிலையில், வழக்கறிஞர் துரைசாமி என்பவர் ஹெச் ராஜா பேசிய விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவில், "சென்னை உயர் நீதிமன்றத்தை அவதூறாகப் பேசிய வழக்கில், வழக்குப் பதிவுசெய்யப்பட்டு உள்ளது. ஆனால், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை; வேறு எந்த முன்னேற்றமும் இல்லை. ஆகவே இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து, வழக்கை நடத்த உத்தரவிட வேண்டும் என்றார்.

2 மாதத்தில்
இந்த வழக்கு இன்று, நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. ஒரு வருடத்திற்கு மேலாகியும் இந்த வழக்கில் ஏன் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லையென நீதிபதி ஜெகதீஷ் சந்திரா கேள்வி எழுப்பினார். அத்துடன் இன்னும் இரண்டு மாதங்களுக்குள் குற்றப்பத்திரிகையை விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்












Click it and Unblock the Notifications