விவாகரத்து வழக்குகளை இனி இழுத்தடிக்க முடியாது.. பெண் நீதிபதிக்கு என்ன நடந்தது? ஹைகோர்ட் அதிரடி
மதுரை: விவாகரத்து வழக்குகளை இழுத்தடிப்பதை தடுக்கும் விதமாக விதிகளில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, டிவிசன் பெஞ்ச் நீதிபதிகள் பரிந்துரை செய்துள்ளனர். பெண் நீதிபதி தொடர்ந்த விவாகரத்து வழக்கில் இந்த பரிந்துரையை உயர்நீதிமன்றம் வழங்கி உள்ளது.
தமிழ்நாடு நீதித்துறையில் மாவட்ட நீதிபதியாக இருக்கும் பெண்ணுக்கு கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின்போது, பட்ட மேற்படிப்பு படித்ததாக கணவர் கூறியிருக்கிறார். ஆனால் பின்னாளில் 12-ம் வகுப்புதான் படித்தவர் என்பது தெரியவந்தது. இதனிடையே இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்திருக்கிறது. இந்த சூழலில் பெண் நீதிபதிக்கும் அவரது கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்தனர். கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு பெண் நீதிபதியும், மனைவியுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று கணவரும் திருச்சி குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இரு வழக்குகளையும் ஒன்றாக விசாரித்த திருச்சி குடும்பநல நீதிமன்றம், கணவனின் வழக்கை தள்ளுபடி செய்தது. பெண் நீதிபதியின் வழக்கை ஏற்றுக்கொண்டு விவாகரத்து வழங்கி தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கணவன் மேல்முறையீடு செய்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-
இந்த வழக்கில் தன்னுடைய கல்வித்தகுதியை கணவன் மறைத்து திருமணம் செய்திருக்கிறார். வரதட்சணை கேட்டும் கொடுமை செய்திருக்கிறார் என்பது தெரிகிறது. அதுமட்டுமல்ல தன் மகளை பார்க்க நீதிபதிகள் குடியிருப்புக்கு வந்த கணவன், அங்கிருந்த மாமியாரையும், மைத்துனியையும் கொடூரமாக தாக்கி உள்ளார்.
மைத்துனிக்கு மதுரையில் திருமணம் நடைபெறும் அதே நாளில் மகளை பார்க்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் உத்தரவை பெற்றுள்ளார். பின்னர் வீட்டை மனைவி பூட்டிவிட்டு சென்று விட்டதாகவும், ஒரு நீதிபதியாக இருப்பவரே கோர்ட்டு உத்தரவை மதிக்கவில்லை என்று உயர்நீதிமன்றத்திற்கு புகார் அனுப்பியுள்ளார். மேலும், மனைவியின் கட்டுப்பாட்டில் இருந்த மகளை தன் தம்பியின் உதவியுடன் கடத்தி உள்ளார்,
மனைவி வேலை செய்யும் ஊரில் உள்ள மாஜிஸ்திரேட்டு கோர்ட்டிலும், சென்னை ஐகோர்ட்டிலும் பொய்யான பல புகார்களையும் கொடுத்துள்ளார். ஒரு நீதிபதியை போலீஸ் நிலையத்துக்கு வரவழைக்க வேண்டும் என்று போலீஸ் நிலையத்திலும் பொய் புகார் அளித்துள்ளார். மனைவிக்கு மனதளவில் செய்யும் கொடுமையாகத்தான் இந்த நீதிமன்றம் கருதுகிறது. கணவரிடம் நடத்திய விசாரணையில் கூட ஆதாரமே இல்லாமல் மனைவிக்கு எதிராக உயர்நீதிமன்றத்திற்கு புகார் அனுப்பியதை ஒப்புக் கொண்டுள்ளார்.
அதுமட்டுமல்ல, கீழ் நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்ட வழக்கு விசாரணை முடியும் தருவாயில், அதுவரை அமைதியாக இருந்த கணவன் சேர்ந்து வாழவேண்டும் என்று வழக்கை தொடர்ந்து, மீண்டும் வழக்கை முதலில் இருந்து விசாரிக்கவேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தி இருக்கிறார்.
எனவே, மனைவி வேலை பார்க்கும் துறையில் உயர் அதிகாரிக்கு பொய்யான புகாரை அனுப்பி அவரை அதிகாரிகள் மத்தியில் அவமானத்தையும், இழிவையும் ஏற்படுத்துவது, கல்வித்தகுதியை மறைத்து திருமணம் செய்வது, மாமியார், மைத்துனியை தாக்கி கொடுங்காயம் ஏற்படுத்தியது, குடியிருப்பு பகுதியில் பிறர் மத்தியில் அவமானம் செய்வது என்று இவை எல்லாம் மனதளவில் கொடுமை செய்வதாகத்தான் அர்த்தம் என்று நீதிமன்றம்க கருதுகிறது.
எனவே, இந்த மேல்முறையீட்டு வழக்கை நாங்கள் தள்ளுபடி செய்கிறோம். திருச்சி கோர்ட்டு தீர்ப்பை உறுதி செய்கிறோம்.மேலும், விவாகரத்து வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு பிறப்பிக்கும் நேரத்தில், சேர்ந்து வாழவேண்டும் என்று எதிர்தரப்பு மனுத்தாக்கல் செய்து விவாகரத்து கிடைக்க விடாமல் தடுப்பதும், வழக்கை இழுத்து அடிப்பதும் சமீபகாலமாக வாடிக்கை உள்ளது. இதனால் விவாகரத்து வழக்குகள் முடிவடைய நீண்ட காலமாகுகிறது. இதனால், புதிய வாழ்க்கை தொடங்க முடியாமல் பலர் பாதிக்கப்படுகிறார்கள்
இதனை கருத்தில் கொண்டு விவகாரத்து வழக்கு தாக்கல் செய்து, 9 மாதங்களில் இருந்து ஓராண்டிற்குள் எதிர்மனுக்களை, அதாவது சேர்ந்து வாழவேண்டும் என்ற தாக்கல் செய்யவேண்டும் என காலத்தை நிர்ணயம் செய்யும் வகையில், விதிகளில் திருத்தம் செய்ய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்கிறோம்" இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications