மதுரை மாநகராட்சியில் 150 கோடி சொத்து வரி முறைகேடு.. தூத்துக்குடியில் உதவி கமிஷனர் கைது ஏன்?
மதுரை: மதுரை மாநகராட்சியில் நடந்ததாக கூறப்படும் ரூ.150 கோடி சொத்து வரி முறைகேடு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் வரை வழக்கு போயிருக்கிறது. இதையடுத்து முதல்வர் ஸ்டாலினின் உத்தரவால் மாநகராட்சியின் ஆளுங்கட்சியை சேர்ந்த ஐந்து மண்டல தலைவர்கள், இரு நிலைக்குழு தலைவர்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இந்நிலையில் வரி முறைகேடு தொடர்பாக, தூத்துக்குடியில் பணியாற்றி வரும் உதவி கமிஷனரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரை மாநகராட்சி ஆணையராக தினேஷ்குமார் என்பவர் பணியாற்றி வந்தார். அவர் பணியில் இருந்த காலத்தில் சொத்து வரி வசூல் தொடர்பாக ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின் போது 2022-23-ம் ஆண்டில் சொத்து வரி வசூலில் மட்டும் ரூ150 கோடி முறைகேடு நடந்ததை கண்டுபிடித்தார்.

இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக மதுரை குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில், மதுரை மாநகராட்சி உதவி வருவாய் அலுவலர் செந்தில்குமரன், ஓய்வு பெற்ற உதவி ஆணையர் ரெங்கராஜன், ஒப்பந்த பணியாளர்கள் தனசேகரன், சதீஷ், கார்த்திகேயன் இடைத் தரகர்கள் ஷாகா உசேன், ராஜேஷ்குமார், முகமது நூர் உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை மாநகராட்சியில் நடந்த, ரூ.150 கோடி ரூபாய் சொத்து வரி முறைகேடு விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பிரச்சனையாக வெடித்தது. இதையடுத்து முதல்வர் ஸ்டாலினே இந்த விவகாரத்தில் தலையிட்டார். அவரது உத்தரவால் மாநகராட்சியின் ஆளுங்கட்சியை சேர்ந்த ஐந்து மண்டல தலைவர்கள், இரு நிலைக்குழு தலைவர்கள் பதவியை அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். மதுரை மாநகராட்சி மண்டல தலைவர்கள் வாசுகி, சரவணபுவனேசுவரி, பாண்டிச்செல்வி, முகேஷ் சர்மா, கவிதா, நகரமைப்பு குழு தலைவர் மூவேந்திரன், வரி விதிப்பு குழு தலைவர் விஜயலட்சுமி ஆகிய 7 பேர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தில் . பில் கலெக்டர்கள் உட்பட 19 பேர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். இந்த வழக்கை மதுரை டி.ஐ.ஜி., அபினவ் குமார் தலைமையிலான போலீசார் விசாரித்து வருகிறார்கள். இம்முறைகேட்டில் கைதான சொத்து வரி குழுத் தலைவர் விஜயலட்சுமியின் கணவர் கண்ணன் என்பவர் அளித்த போலீசில் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் தூத்துக்குடியில் உதவி கமிஷனராக பணியாற்றி வரும் சுரேஷ்குமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சுரேஷ்குமாரை, விசாரணைக்காக போலீசார் மதுரை அழைத்து வந்தவர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இதுவரை மதுரை சொத்து வரி முறைகேடு தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications