சேகர்பாபு என் மீது அன்பாக இருக்காரு.. கெடுத்துடாதீங்கப்பா! சிரித்துக் கொண்டே சமாளித்த மதுரை ஆதீனம்!
மதுரை: இலங்கையில் தமிழருக்கு தனி நாடு ஏற்படுத்த வேண்டும் இது தொடர்பாக கச்சத்தீவை மீட்க மத்திய அரசுக்கு கோரிக்கை வைப்பேன் என மதுரை ஆதீனம் கூறியுள்ளார். மேலும், திருப்பரங்குன்றம் மலை மீது ஆடுகளை பலியிடுவது குறித்து, உயிர்களை பலியிடுவது பாவம், அவ்வாறு செய்யக் கூடாது என்றார்.
மதுரை பாண்டி கோயில் அருகே உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மதுரை ஆதீனம் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர்," திருப்பரங்குன்றம் மலை மீது ஆடுகளை பலியிடுவது தொடர்பாக விவாதம் எழுந்துள்ளது. நமது சமயம் என்ன கூறுகிறது என்றால் அனைத்து உயிரினங்கள் மீதும் அன்பே சிவம் எனக் கூறுகிறது. உயிர் வதம் செய்யக்கூடாது. உயிர் வதம் செய்வது மகா பாவம். உயிர்களை பலியிடக் கூடாது. சிக்கந்தர் மலை என இஸ்லாமியர்கள் கூறுகிறார்கள், அறுபடை வீடுகளில் முதல் படை வீடு திருப்பரங்குன்றம்.
இதனை நமது புராணம் சொல்கிறது. யார் யாரோ சொல்வதை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. இஸ்லாமும், கிறிஸ்தவமும் வெளியிலிருந்து வந்த மதங்கள் ஆகும். இங்கு அனைவரும் ஒற்றுமையாக இருந்து தான் வழிபாடு செய்ய வேண்டும். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது என்பது எங்களது வழக்கமாகும். மலை உச்சியில் ஏற்றுவது தவறில்லை. நாங்கள் ஒன்றும் சவூதி அரேபியா சென்று ஏற்றவில்லையே.
திருப்பரங்குன்றம் மலை தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசு மற்றும் இந்து சமய அறநிலையத் துறை ஆகியவற்றின் செயல்பாட்டில் எந்த தவறும் இல்லை. தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு என் மீது அன்பாக இருக்கிறார் அதனை கெடுத்து விடாதீர்கள்.
இலங்கையில் தமிழர்களை கொன்று விட்டார்கள். அது ராஜீவ் காந்தி அரசுதான், ஆனால், மோடி அரசு அவர்களுக்கு வீடு கட்டி கொடுத்துள்ளது. இலங்கையில் தனிநாடு உருவாக்கித் தர வேண்டும். அதற்காக தான் மோடியை சந்தித்து வருகிறேன்.
இலங்கை மீனவர்களை கைது செய்யக் காரணம் கச்சத்தீவை நாம் இழந்தது தான். இவை அனைத்திற்கும் காரணம் காங்கிரஸ் அரசுதான். இந்தியாவில் ஒரு இடத்தில் கூட அந்தக் கட்சியை ஜெயிக்க விடக்கூடாது. கச்சத்தீவை மீட்பதற்கு பிரதமரிடம் கோரிக்கை வைத்து வருகிறேன். தமிழர்களுக்கு குரல் கொடுத்தே தீர வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications