கார் மோதல் விவகாரம்! போலீஸ் அறிக்கை முன்னுக்கு பின் முரண்! மதுரை ஆதீனம் பரபரப்பு குற்றச்சாட்டு
மதுரை: கார் மோதல் விவகாரத்தில் காவல் துறையின் அறிக்கை முரணாக உள்ளது என மதுரை ஆதீனம் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் 15-க்கும் மேற்பட்ட முறை காவல் அதிகாரிகளிடம் பேசி புகார் அளித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: வாகனம் மோதல் விவகாரத்தில் காவல் துறையின் அறிக்கை முன்னுக்கு பின் முரணாக உள்ளது. நாங்கள் எந்த வித புகாரையும் அளிக்கவில்லை என போலீஸ் கூறுவது உண்மைக்கு புறம்பானது. 15-க்கும் மேற்பட்ட முறை காவல் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

நடந்தது என்ன
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் 6ஆவது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு 3ஆம் தேதி தொடங்கியது. இது இன்று வரை நடைபெறுகிறது.
மாநாட்டில் பங்கேற்பு
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக மதுரை ஆதீனம், மதுரையிலிருந்து சென்னை நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவரது கார் உளுந்தூர்பேட்டை அருகே வந்து கொண்டிருந்த போது அவரது கார் மீது மற்றொரு கார் மோதியது.
மதுரை ஆதீனம்
இந்த விபத்தில் மதுரை ஆதீனம் எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பினார். இதையடுத்து விபத்துக்குள்ளான காரிலேயே மதுரை ஆதீனம் சென்னை புறப்பட்டார். இந்த நிலையில் தருமபுரம் ஆதீனம் இந்த விபத்து திட்டமிட்ட சதி என்றும் தன்னை கொலை செய்யவே இது போன்ற விபத்தை ஏற்படுத்தியதாகவும் குற்றம்சாட்டினார்.
கொலை செய்ய சதி
இந்த மாநாட்டில் பேசிய மதுரை ஆதீனத்தின் 293-ஆவது பீடாதிபதியான ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞான சம்பந்ததேசிக பரமாச்சார்ய சுவாமிகள், தன்னை கொலை செய்ய சதி நடந்ததாக குற்றம்சாட்டினார். மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்ட மாநாட்டில் ஆதீனம் இது போல் குற்றம்சாட்டி பேசியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கார் விபத்திலிருந்து தன்னை மீனாட்சி சுந்தரேஸ்வரர்தான் காப்பாற்றினார் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
மதுரை ஆதீனம் சென்ற கார்
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், மதுரை ஆதீனம் சென்ற கார், அஜிஸ் நகர் மேம்பாலத்தில் செல்லவில்லை. அதற்கு பதிலாக அஜிஸ் நகர் பிரிவு சாலை வழியாக உளுந்தூர்பேட்டை மார்க்கத்தில் அதிவேகமாக சென்றது. அப்போது காலை 9.45 மணிக்கு சேலம்- சென்னை நோக்கி சென்ற மாருதி கார் ரவுன்டானா அருகே மெதுவாக கடந்தது. அப்போது மதுரை ஆதீனம் காரின் பக்கவாட்டில் அந்த கார் உரசியது. இதனால் இரு கார்களும் லேசான சேதமடைந்தன.
வாக்குவாதம்
பின்னர் இரு தரப்பினரும் வாக்குவாதம் செய்துவிட்டு அந்த இடத்தை விட்டு புறப்பட்டுவிட்டனர். முதற்கட்ட விசாரணையில் கொலை முயற்சிக்கான சதி எதுவும் இல்லை. ஆதீனம் பயணம் செய்த கார் டிரைவரின் கவனக்குறைவாலேயே விபத்து நடந்துள்ளது.
சிசிடிவி காட்சிகள்
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது மதுரை ஆதீனம் பயணம் செய்த கார்தான் அதிவேகமாக சென்றது. இதுவரை இரு தரப்பினரும் புகார் கொடுக்கப்படவில்லை. இது விபத்துதான், கொலைக்கான சதி என யாரேனும் பொய்யான தகவலை பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு போலீஸார் தெரிவித்துள்ளனர்.
ஆதீனம் டிரைவர் மீது வழக்கு
இந்த நிலையில் ஆதீனத்தின் கார் டிரைவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அங்கிருந்த சிசிடிவி காட்சிகளில் ஆதீனத்தின் கார் வேகமாக சென்றதாகவே தெரிகிறது என்கிறார்கள். இந்த நிலையில்தான் போலீஸ் அறிக்கை முன்னுக்கு பின் முரணாக இருப்பதாக ஆதீனம் குற்றம்சாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications