பொதுமக்கள் சினிமாவுக்கு செல்வதை தவிர்க்கணும்! கோயில் சொத்துக்கு ஆசைப்படக் கூடாது! -மதுரை ஆதினம்
மதுரை: பொதுமக்கள் சினிமாவுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் கோயில்களுக்கும், மடங்களுக்கும் அதிகம் சென்று வர வேண்டும் எனவும் மதுரை ஆதினம் வேண்டுகோளை விடுத்துள்ளார்.
சினிமாவில் 3 மணி நேரம் செலவிடுவதால் என்ன பயன் என்றும் கோயில்களுக்கும், மடங்களுக்கும் மக்கள் சென்றால் தான் மன நிம்மதி கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். அதேபோல் கோயில் சொத்துக்களுக்கு யாரும் ஆசைப்படக் கூடாது எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

கோயிலும், மடமும் தான் பவர் கிடைக்கும் இடங்கள் என்றும் இது இன்னும் பலருக்கு தெரியவில்லை எனவும் ஒரு விளக்கம் அளித்தார் மதுரை ஆதினம். மன ஆறுதல் கொடுக்கக் கூடிய இரண்டே இடங்கள் கோயிலும், மடமும் தான் என தெரிவித்துள்ளார்.
மனிதர்களை பக்குவப்படுத்தும் பவர் ஸ்டேஷன்களாக கோயிலும், மடமும் திகழ்கிறது என மதுரை ஆதினம் தெரிவித்துள்ளார். இவரை பொறுத்தவரை ஆன்மிகப் பணிகளோடு சேர்ந்து அரசியலும் பேசக் கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் நடைபெற்ற புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் கலந்துகொண்ட மதுரை ஆதினம் தனிப்பட்ட முறையில் ஒரு செங்கோலை பிரதமர் மோடிக்கு பரிசளித்திருந்தார்.
ஆன்மிகம், அரசியல் மட்டுமே பேசி வந்த மதுரை ஆதினம் முதல்முறையாக சினிமாவை பற்றியும் பேசியிருக்கிறார். அதுவும் பொதுமக்கள் சினிமாவுக்கு செல்ல வேண்டாம் என்ற கோரிக்கையை முன் வைத்து கவனம் ஈர்த்திருக்கிறார்.
மடத்திற்கு வருபவர்கள் ஆசிபெற்று செல்ல வேண்டுமே தவிர இவரிடம் என்ன இருக்கிறது, ஆதினத்துக்கு என்ன சொத்து இருக்கிறது என்ற சிந்தனையை கைவிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழ்நாட்டின் மற்ற ஆதினங்களை விட மதுரை ஆதினம் மடம் மிகவும் பழமையானது என்பதும் ஏராளமான சொத்துக்கள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications