மதுரையில் அதிகரிக்கும் சசிகலா ஆதரவு போஸ்டர்கள்- "கேம்" ஆரம்பம்.. எடப்பாடிக்கு எதிராக திரளும் "தெற்கு"?
மதுரை: மதுரை உள்ளிட்ட தென்மாவட்ட அதிமுகவில் சசிகலா ஆதரவு குரல்கள் வலுத்து வருகின்றன. மதுரை நகரில் நேற்று திருப்பரங்குன்றத்தில் சசிகலாவுக்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட நிலையில் இன்று மதுரை நகரின் பல பகுதிகளிலும் அதேபோல் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சசிகலாவை அதிமுகவில் சேர்க்கப்போவதில்லை; சசிகலாவுடன் தொலைபேசியில் பேசியவர்கள் கட்சியை விட்டு நீக்கப்படுவார்கள் என ஓபிஎஸ்- ஈபிஎஸ் இருவரும் கூட்டாக அறிவித்தனர். அத்துடன் சசிகலாவுடன் தொலைபேசியில் பேசியவர்களும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர்.
இதன்பின்னர் சேலம், விழுப்புரம், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிமுக கூட்டங்கள் கூட்டப்பட்டு சசிகலாவுக்கு எதிராக தீர்மானங்கள் அடுத்தடுத்து நிறைவேற்றப்பட்டன. சசிகலா அதிமுகவின் உறுப்பினர் ஆகக் கூட தகுதி இல்லாதவர் என்றும் அந்த தீர்மானத்தில் வாசகம் இடம்பெற்றிருந்தது.

அதிருப்தி ஓபிஎஸ்
ஆனால் மாவட்டங்கள்தோறும் தீர்மானங்களை நிறைவேற்றியதை ஓ.பி.எஸ். விரும்பவில்லையாம். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான எனக்கு தெரியாமலேயே மாவட்டங்களில் அதிமுக கூட்டங்களை கூட்டி எப்படி தீர்மானம் நிறைவேற்றலாம்? என ஆவேசப்பட்டாராம் ஓ.பி.எஸ். இதனால் சசிகலாவுக்கு எதிராக தடலாடியாக தீர்மானம் போடுவது குறைந்தது.

தென்மாவட்டத்தில் சசிகலா ஆதரவு
அதேநேரத்தில் தூத்துக்குடி தொடங்கி தென்மாவட்டங்களில் சசிகலா ஆதரவு குரல்கள் இப்போது அதிகரிக்க தொடங்கிவிட்டன. தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சசிகலாதான் அதிமுகவுக்கு தலைமை ஏற்க வேண்டும் என ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. மதுரை திருப்பரங்குன்றத்தில் அதிமுக ஒன்றிய அண்ணா தொழிற்சங்க செயலாளரும் மாவட்ட கவுன்சிலருமான கே.லெட்சுமிபதி ராஜன் நேற்று சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டியிருந்தார்.

மதுரையில் இன்றும் சசிகலா ஆதரவு போஸ்டர்கள்
இன்று மதுரை நகரின் பல இடங்களில் சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. ஜெயலலிதாவின் மறு உருவமே சசிகலா என அந்த சுவரொட்டிகளில் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. இது அதிமுகவில் புதிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

சசிகலாவின் ஓபிஎஸ் ஆதரவு
இது தொடர்பாக தென்மாவட்ட அதிமுக நிர்வாகிகளிடம் பேசியபோது, சசிகலா தற்போது வெளியிட்டு வரும் ஆடியோக்களில் தொடர்ந்து ஓ.பி.எஸ்.க்கு ஆதரவாகவே பேசி வருகிறார். இதனைத்தான் ஓ.பி.எஸ்-ம் எதிர்பார்த்து இருந்தார். சசிகலா- ஓபிஎஸ் இடையே சமாதானம் ஆகிவிடக் கூடாது என்பதற்காகவே எடப்பாடி தரப்பு தீர்மானங்களைப் போட்டது.

ஆட்டத்தை தொடங்கிய ஓபிஎஸ்
இதில் கோபப்பட்ட ஓ.பி.எஸ் இப்போது தனது ஆட்டத்தை தொடங்கி உள்ளார். இது எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான ஓபிஎஸ்-ன் புதிய யுத்தம். தென்மாவட்டங்கள் ஒவ்வொன்றிலுமாக இதேபோல் சசிகலா ஆதரவு தீர்மானங்கள், போஸ்டர்கள் விஸ்வரூபம் எடுக்கப் போகிறது. பொறுத்திருந்து பாருங்கள் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications