மார்ச் 1ல் மதுரை வரும் பிரதமர் மோடி.. அரசு நிகழ்ச்சி இருக்கு.. ஆனால் எய்ம்ஸ் திறப்பு இல்லையாம்!
மதுரை: மார்ச் 1ஆம் தேதி மதுரைக்கு பிரதமர் நரேந்திர மோடி வரும் போது எய்ம்ஸ் திறப்பு நிகழ்ச்சி இல்லை என்பது தெரிய வந்துள்ளது. மதுரை விமான நிலைய வளாகத்தில் நடக்கும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கும் மோடி, ரயில்வே மற்றும் உட்கட்டமைப்பு சார்ந்த முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது.
2019 லோக்சபா தேர்தலுக்கு முன்பாக மதுரை வந்த பிரதமர் நரேந்திர மோடி, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடம் உடனடியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட போதும், கட்டுமான பணிகள் தொடங்க தாமதம் ஏற்பட்டது. இதனால் எதிர்க்கட்சிகள் எய்ம்ஸ் செங்கல் என்று தேர்தலில் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

2021 மற்றும் 2024 ஆகிய இரு தேர்தல்களிலும் உதயநிதி ஸ்டாலின் மிகப்பெரிய பிரச்சாரத்தை மேற்கொண்டார். இதற்கு பதிலளிக்க முடியாமல் பாஜக தடுமாறியது. ஏனென்றால் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய அதே காலத்தில் மற்ற மாநிலங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மோடி அடிக்கல் நாட்டி இருந்தார். அவை கட்டி முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தன.
ஆனால் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இன்னும் முதற்கட்ட கட்டுமான பணிகள் கூட முடிக்கப்படவில்லை. இதனிடையே மதுரையில் 2024க்கு பின் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. அதுமட்டுமல்லாமல் ஆகஸ்ட் மாதத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையின் 3டி வீடியோ வெளியிடப்பட்டதோடு, ஜனவரி மாதம் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இது மதுரை மக்கள் மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இப்படியான சூழலில் மார்ச் 1ஆம் தேதி பிரதமர் மோடி மதுரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. அப்போது எய்ம்ஸ் மருத்துவமனையின் முதற்கட்ட வளாகம் திறக்கப்படும் என்று தமிழிசை செளந்தரராஜன் கூறி இருந்தார். அதேபோல் நயினார் நாகேந்திரனும் பிரதமர் மோடி மதுரை வரும் போது அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கலாம் என்று கூறினார்.
இதனால் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திறக்கப்பட உள்ளதாக நம்பப்பட்டது. இந்த நிலையில் பிரதமர் மோடியின் மதுரை மாவட்ட பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மதுரை விமான நிலையம் அருகே உள்ள மைதானத்தை தயார் செய்யும் பணிகளில் பாஜக ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில் மதுரைக்கு வரும் பிரதமர் மோடி, எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைக்கும் நிகழ்ச்சி இல்லை என்று தெரிய வந்துள்ளது. தற்போதைய சூழலில் மதுரை விமான நிலையத்தில் நடக்கும் அரசு நிகழ்ச்சியில் தான் பங்கேற்க இருப்பது தெரிய வந்துள்ளது. உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் ரயில்வே உள்ளிட்ட துறை சார்ந்த முடிவுற்ற பணிகளை திறந்து வைக்க உள்ளார் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications