மண்ணெண்ணெய் கேனோடு மேலே ஏறி.. பரபரப்பு! போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்ட சின்ன உடைப்பு கிராம மக்கள்!
மதுரை : மதுரை விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சின்ன உடைப்பு கிராம மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில், வீடுகளை காலி செய்ய அதிகாரிகள் 1 வாரம் அவகாசம் அளித்த நிலையில், மக்கள் தற்காலிகமாக போராட்டத்தைக் கைவிட்டுள்ளனர்.
மதுரை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக சுமார் 633.17 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அரசு திட்டமிட்டது. அந்த நிலத்தின் பகுதிகளில் சின்ன உடைப்பு கிராம பகுதிகளுக்கு உட்பட்ட நிலங்களும் உள்ளன. விமான நிலையத்தின் விரிவாக்க பணிகளுக்காக ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டு அதனை கையகப்படுத்துவதற்காக சின்ன உடைப்பு கிராமத்திற்கு அதிகாரிகள் வருகை தந்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தங்களை மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அவ்வாறு செய்யாமல் நிலம் கையகப்படுத்துவதை அனுமதிக்க மாட்டோம் எனக் கூறி கடந்த 4 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர்.
நேற்று முன்தினம் வருவாய்த்துறை அதிகாரிகள் ஜேசிபி உள்ளிட்ட கனரக இயந்திரங்களுடன் வந்ததால் போராட்டம் தீவிரமடைந்தது. இந்நிலையில் இன்று காலை 1000-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சின்ன உடைப்பு கிராம மக்களும் போராட்டத்தை தீவிரப்படுத்தினர். அப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியின் மீது மண்ணெண்ணெய் கேன்களோடு ஏறிய மக்கள் நிலம் கையகப்படுத்தும் பணியை தொடர்ந்தால் தீக்குளிப்போம் என மிரட்டல் விடுத்தனர்.

மேலும், ஏராளமான பெண்களும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் சிலர் மயக்கமடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. இதையடுத்து, கிராம மக்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, போராட்டத்தை மக்கள் தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளனர்.

மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா கூறுகையில், "கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு, அதன் உரிமையாளரிடம் ஏற்கனவே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. தற்போது அவர்கள் கூடுதல் இழப்பீடு மற்றும் நிலம் கேட்கிறார்கள். நிலம் கையகப்படுத்தும் போது இழப்பீடு மட்டுமே வழங்கப்படும். இருந்தும், வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள மக்களுக்கு கிராம பகுதியில் நிலம் வழங்குகிறோம் என கூறியுள்ளோம். மேலும் வீடுகளை காலி செய்ய ஒரு வார காலம் அவகாசம் அளித்துள்ளோம். இதனால், தற்போது அப்பகுதி மக்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்" எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications