அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் குளறுபடி? அமைச்சர் மீது 2ம் இடம்பிடித்த வீரர் பரபர புகார்! என்ன நடந்தது
மதுரை: மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் நான் தான் முதலிடம் பிடித்தேன். எனக்கு கார் வேண்டாம். முதலிடம் பிடித்ததை மட்டுமே கூறினால் போதும் என 2ம் இடம் பிடித்த அபிசித்தர் கூறியுள்ளார். மேலும் அவர் அமைச்சருக்கு எதிராக பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ள நிலையில் அவர் மீது புகாரளிக்க உள்ளதாக கொந்தளித்துள்ளார்.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை இன்றுடன் முடிவடைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக புகழ் பெற்றவை. மதுரையை பொறுத்தமட்டில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் என 3 இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும்.

நேற்று முன்தினம் அவனியாபுரத்திலும், நேற்று பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து முடிந்தன. வெற்றி பெற்ற காளைகள், வெற்றி பெற்ற வீரர்களுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது. இதையடுத்து இன்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்தது.
வாடிவாசலில் இருந்து கம்பீரமாக துள்ளிக்குதித்து வந்த காளைகளை, காளையர்கள் அடக்கி வீரத்தை வெளிக்காட்டினர். காலை 7 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு மாலை 6 மணியை கடந்து நடந்து முடிந்தது.
இதில் மொத்தம் 810 காளைகள் பங்கேற்றன.
போட்டியின் முடிவில் 18 காளைகளை அடக்கி கருப்பாயூரணி கார்த்தி முதலிடம் பெற்றார். அவருக்கு முதல்வர் ஸ்டாலின் சார்பில் முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது. இவர் கடந்த 2022ம் ஆண்டிலும் முதல் பரிசை தட்டிச்சென்ற நிலையில் இப்போது 2வது முறையாக முதலிடம் பிடித்து அசத்தி உள்ளார்.
அலங்காநல்லூரில் கடைசி வரை விறுவிறுப்பு.. 18 காளைகளை அடக்கிய கார்த்திக்... கார் பரிசு
அதேபோல் 17 காளைகளை அடக்கியதாக கூறிய பூவந்தியை சேர்ந்த அபிசித்தர் 2ம் இடம் பிடித்தார்.
எம். குன்னத்தூரை சேர்ந்த திவாகர் 12 காளைகளை அடக்கி 3ம் இடம் பிடித்தார். இவர்களுக்கும் பரிசு என்பது வழங்கப்பட்டது. இந்நிலையில் தான் அலங்காநல்லூரில் 2ம் இடம் பிடித்த மாடுபிடி வீரர் அபிசித்தர் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இதுதொடர்பாக 2ம் இடம் பிடித்த அபிசித்தர் கூறுகையில், ‛‛ஜல்லிக்கட்டு போட்டி மாலை 6.30 மணி வரை நீட்டித்தது தவறு. ஜல்லிக்கட்டில் நான்தான் முதலிடம் பெற்றேன். எனக்கு கார் பரிசு தேவையில்லை. நான் முதலிடம் பெற்றதாக அறிவித்தாலே போதும். அமைச்சர் மீது புகாரளிப்பேன்’’ என தெரிவித்துள்ளார். இதில் அவர் அமைச்சர் என மூர்த்தியை குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வீரரின் இந்த குற்றச்சாட்டால் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் குளறுபடி ஏற்பட்டதாக என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications