முறுக்கு விற்க, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் என்ன உணவு விற்பனை கூடமா? உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் எதற்காக முறுக்கு உள்ளிட்ட உணவு பொருட்களை விற்கிறீர்கள். அது கோயில் வளாகமாக இல்லை உணவு விற்பனை கூடமா என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில், அதன் உப கோயில் சொத்துக்களை மீட்டு பாதுகாக்கக் கோரியும், கோயிலில் புனரமைப்பு பணிகளை முடித்து குடமுழுக்கு நடத்த உத்தரவிடக் கோரியும் சேலம் ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொது நல வழக்கை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அதில் இந்து சமய அறநிலையத் துறை, வருவாய் துறை சார்பில் மீனாட்சி அம்மன் கோயில், உப கோயில்களின் சொத்துகள் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டன.
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் அளிக்கப்பட்ட சொத்து விவரமும் வருவாய் துறை அளித்த சொத்து விவரமும் பொருந்தவில்லை என நீதிபதிகள் கூறி ஏற்க மறுத்தனர். இந்து சமய அறநிலையத் துறை ஆணையர், இணை ஆணையர், வருவாய் துறை இணைந்து கோயில் சொத்துக்களை ஆவணங்களின் அடிப்படையில் பொருத்தி உறுதி செய்ய வேண்டும் என்றும் நவம்பர் 22 ஆம் தேதி அது தொடர்பான கூட்டத்தை நடத்தி, அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார்.
இதனிடையே மீனாட்சி அம்மன் கோயிலின் கிழக்கு ராஜகோபுரம் அருகே கிரானைட் கற்கள் புதிதாக பதிக்கப்படுவதாகவும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு உணவு வழங்குவதற்காக யானை மண்டபம் பகுதியில் உணவு சமைக்கப்படுவதாகவும் மனுதாரர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
அதற்கு நீதிபதிகள், பழமையான கோயில்களில் பழமை மற்றும் பாரம்பரியம் பாதுகாக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டு அது தொடர்பாக பதிலளிக்க உத்தரவிட்டு நவம்பர் 26ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தனர்.
கோயிலில் வணிக நோக்கில் பக்தர்களுக்கு அப்பம், முறுக்கு தயாரிக்கப்பட்டு பிரசாதம் என கூறி விற்பனை செய்வது ஏன்? இது கோயில் வளாகமா இல்லை உணவு விற்பனை கூடமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.












Click it and Unblock the Notifications