ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவை சமூக ஊடகங்களில் விமர்சிப்பதை ஏற்க முடியாது- நீதிபதிகள் எச்சரிக்கை
மதுரை: திருப்பரங்குன்றம் விவகாரத்தை சமூக ஊடகங்களில் தேவையில்லாமல் விமர்சனம் செய்வதை ஏற்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் ஜெயசந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியிருந்ததாவது: திருப்பரங்குன்றம் விவகாரத்தை சமூக ஊடகங்களில் விமர்சிக்கக் கூடாது. தேவையில்லாமல் செய்யப்படும் சமூக ஊடக விமர்சனங்களை ஏற்க முடியாது.
திருப்பரங்குன்றம் உச்சியில் தீபம் ஏற்றும் உத்தரவை விமர்சிக்கக் கூடாது. நீதிமன்ற மரபை மீறி நடக்கக் கூடாது. மனுதாரரும் எதிர்மனுதாரரும் நீதிமன்ற மாண்பை கடைப்பிடிக்கும் வகையில் பேச வேண்டும். இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என அவர்கள் தெரிவித்திருந்தனர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்றப்படவில்லை. அதற்கு பதிலாக உச்சி பிள்ளையார் கோவிலில் தூணில் ஏற்றினர். இந்த நிலையில் ஹைகோர்ட் மதுரை கிளை உத்தரவை நிறைவேற்ற நீதிபதி சுவாமிநாதன் உத்தரவின்பேரில் மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீர்ரகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
அவர்கள் மலை மீது விளக்கேற்ற சென்ற மனுதாரருக்கு பாதுகாப்பாக சென்ற போது அவர்கள் யாரையும் போலீஸார் அனுமதிக்கவில்லை. அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என நேற்று மாலை தமிழக அரசு சென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதி எம்.எஸ்.ஸ்ரீவஸ்தவாவிடம் முறையிடப்பட்டது.
இந்த கோரிக்கை தொடர்பாக மதுரை ஹைகோர்ட்டில் முறையிடுமாறு அறிவுறுத்தியிருந்தார். இதையடுத்து நேற்று இரவில் மதுரை ஹைகோர்ட்டில் தமிழக கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீரா கதிரவன் சார்பில் மேல்முறையீட்டு மனு அவசர மனுவாக தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரிப்பதாக சொல்லப்பட்டது. அதன்படி இன்று நீதிபதிகள் ஜெயசந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இந்த விசாரணையை வரும் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்க அரசுத் தரப்பு கோரிக்கை வைத்தது. கால அவகாசம் வேண்டும் எனக் கோரப்பட்டது. மேலும், பல்வேறு தரப்பிலும் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்ய விரும்புவதால், விரும்புவர்கள் மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்யலாம், புதன்கிழமை வழக்குகள் விசாரிக்கப்படும். அதன் பின்னர் புதிதாக வரும் மனுக்கள் ஏற்கப்படாது என இரு நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது.
டெல்லியில் இருந்து வழக்கறிஞர்கள் வரவேண்டும் என்பதால் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்குமாறு தமிழக அரசு தரப்பு கோரியது. இதையடுத்து, அனைத்து தரப்பினரின் வாதங்களைக் கேட்டு உத்தரவு பிறப்பிக்க இருக்கிறோம், உத்தரவுகள் பிறப்பிக்கக் கோரி நீதிமன்றத்தை அவசரப்படுத்த வேண்டாம் எனத் தெரிவித்து வரும் 12 ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்து 2 நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications