மதுரையில் 2 தொகுதிகள் கேட்டு அடம்பிடிக்கும் பாஜக.. இறங்கி வரத் தயங்கும் அதிமுக.. என்ன நடக்கிறது?
மதுரை: மதுரை மாவட்டத்தில் 2 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதில் பாஜக தீவிரமாக காய் நகர்த்தி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. மதுரையில் அதிமுகவுக்கு ஆதரவு அதிகரித்து வரும் சூழலில், அக்கட்சி நிர்வாகிகள் மிக முக்கியமான இரு தொகுதிகளை விட்டுக் கொடுக்க தயக்கம் காட்டி வருகிறது. இதனால் பாஜகவின் அடுத்தக்கட்ட திட்டம் என்ன என்று பார்க்கலாம்.
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், பாஜக தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி இருக்கிறது. இந்த சட்டசபைத் தேர்தலில் அனைத்து கட்சிகளும் மதுரை மாவட்டத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து வருகின்றன. ஏற்கனவே பாஜக தரப்பில் முருகன் மாநாடு நடத்தப்பட்ட நிலையில், திமுக தரப்பில் பொதுக்குழு கூட்டம் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

அதன்பின் தவெக சார்பாக 2வது மாநில மாநாடு மதுரை பாரபத்தியில் நடைபெற்றது. அதேபோல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரை மாவட்டத்தில் மட்டும் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு தரப்பு மக்களையும் சந்தித்தார். கடந்த சட்டசபைத் தேர்தலை ஒப்பிடுகையில், மதுரையில் அதிமுகவுக்கான ஆதரவு அதிகரித்துள்ளதாக தெரிகிறது.
அதிமுக - பாஜக கூட்டணி அமைத்திருப்பது சில தொகுதிகளில் மிகப்பெரிய சாதகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் மதுரையில் பாஜக சார்பாக 2 தொகுதிகளில் கட்டாயம் போட்டியிட வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டி வருகிறது. குறிப்பாக மதுரை தெற்கு மற்றும் மேலூர் தொகுதிகளில் போட்டியிட பாஜக பேச்சுவார்த்தையை தொடங்கி இருப்பதாக பார்க்கப்படுகிறது.
ஆனால் இந்த தொகுதிகளும் கிட்டத்தட்ட அதிமுகவுக்கு மிகப்பெரிய சாதகத்துடன் இருக்கும் தொகுதிகளாகும். மதுரை மேற்கு தொகுதியில் அமைச்சர் மூர்த்தி தனது ஆதரவாளர்கள் மூலமாக பல்வேறு தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார். திமுகவின் தீவிரத்தை பார்த்த செல்லூர் ராஜு, தொகுதி மாறலாமா என்பதை ஆலோசித்து வருகிறார்.
அவரின் பார்வை மதுரை தெற்கு தொகுதி பக்கமாக திரும்பி இருக்கிறது. ஏனென்றால் முக்குலத்தோர் சமூக வாக்குகள் நிச்சயம் கிடைக்கும் என்பதோடு, பாஜக கூட்டணியில் இருப்பதால் செளராஷ்டிரா மக்களின் வாக்குகளும் கிடைக்கும் என்று கணக்கு போட்டுள்ளார். ஆனால் மதுரை தெற்கு தொகுதியில் போட்டியிட பாஜகவின் மாநிலச் செயலாளர் ராம சீனிவாசன் ஆர்வம் காட்டி வருகிறார்.
இதனை வெளிப்படையாகவே சில இடங்களிலும் பேசிவிட்டார். அதேபோல் மேலூர் தொகுதியை விட்டுக் கொடுக்கவும் அதிமுக தயக்கம் காட்டி வருகிறது. அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் பலரும் மதுரையில் போட்டியிட காய்களை நகர்த்தி வரும் சூழலில், மதுரையில் பாஜகவுக்கு 2 தொகுதிகளை ஒதுக்கக் கூடாது என்று எடப்பாடி பழனிசாமியிடமே சில வாரங்களுக்கு முன் அக்கட்சியினர் முறையிட்டனர்.
இதனை கேட்டுக் கொண்ட எடப்பாடி பழனிசாமி, ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்று பேசி சென்றுள்ளார். மதுரைக்கு எடப்பாடி பழனிசாமி வந்த போது, அந்தந்த தொகுதிகள் சார்பாக வேட்பாளராக களமிறங்க திட்டமிட்டவர்கள் பலரும் மிகப்பெரிய அளவில் செலவு செய்து மக்களை அழைத்து வந்துள்ளனர். ஒவ்வொரு தொகுதிக்கும் பணம் மட்டுமல்லாமல் சேலை, வேட்டி, தட்டு ஆகியவை அளிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை பாஜகவுக்கு 2 தொகுதிகள் வரை ஒதுக்கப்பட்டால், அதிமுக நிர்வாகிகள் பாஜகவுக்கு சாதகமாக செயல்படுவார்களா என்பதும் சந்தேகம் தான். இதனால் எடப்பாடி பழனிசாமியின் முடிவை பொறுத்தே மதுரை மாவட்டத்தில் அதிமுகவின் வெற்றி அமையும் என்று அக்கட்சியினர் பேச தொடங்கி இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications