மதுரை ரௌடி என்கவுண்டர் நடந்தது எப்படி? “குனிந்ததால் நெஞ்சில் பாய்ந்த குண்டு”.. காவல் ஆணையர் விளக்கம்
மதுரை: மதுரையில் அண்மையில் நடந்த கிளாமர் காளி கொலை வழக்கில் தொடர்புடைய ரௌடி இன்று இரவு என்கவுண்டர் செய்யப்பட்டார். பல குற்ற வழக்குகளில் ரவுடிகள் தொடர்ந்து என்கவுன்ட்டர் செய்யப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
என்கவுண்டர் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மதுரை மாநகர காவல்துறை ஆணையர் லோகநாதன், "போலீசார் தற்காப்பிற்காகத்தான் சுட்டனர். ரவுடி சுபாஸ் சந்திரபோஸின் கால்களுக்கு தான் குறி வைக்கப்பட்டது. அந்த நேரத்தில் அவர் குனிந்து விட்டார். இதனால் அவர் மீது குண்டும் பாய்ந்தது." எனத் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம், தனக்கன்குளம் மொட்டமலை பகுதியில் கடந்த 22 ஆம் தேதி அரசியல் பிரமுகர் விகே குருசாமியின் உறவினரான கிளாமர் காளி என்ற காளீஸ்வரன் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். கிளாமர் காளி கொலை வழக்கில் பிரபல ரவுடியின் தாயார் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அந்தக் கொலை வழக்கில் தொடர்புடைய சுபாஷ் சந்திர போஸ் என்ற ரௌடியை போலீசார் என்கவுண்டர் செய்துள்ளனர்.
கிளாமர் காளி கொலை
மதுரையில் கிளாமர் காளி என்கிற காளீஸ்வரன் கொலை வழக்கில் பிரபல ரவுடி காளிமுத்து என்ற வெள்ளைக்காளியின் தாயார் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டு கடந்த 29 ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டனர். கிளாமர் காளி கொலை வழக்கில் சுள்ளான் முத்துப்பாண்டி என்ற நபர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
அதனைத் தொடர்ந்து பிரபல ரவுடி வெள்ளைக்காளியின் தாயார் ஜெயக்கொடி மற்றும் சிவகங்கை மாவட்டம் மணல்மேடு பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், முத்துகிருஷ்ணன், மதுரை கல்மேடு நந்தகுமார், காமராஜபுரம் நவீன் குமார், சென்னை சேர்ந்த கார்த்திக், திருப்பூரை சேர்ந்த அசன் ஆகிய ஏழு பேரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.
என்கவுண்டர்
இந்த நிலையில் அந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ரௌடி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் அவரது கூட்டாளிகள் மதுரை வேலம்மாள் மருத்துவமனை அருகே உள்ள காலி இடத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அவரை பிடிக்க முற்பட்டபோது போலீசார் தாக்கி விட்டு தப்ப முயன்றார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பூமிநாதன் அவரை சுட்டதில் சுபாஷ் சந்திர போஸ் உயிரிழந்தார். அவரது உடல் உடற்கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
சுபாஷ் சந்திரபோஸ் கேங்
வேறொரு கொலை முயற்சியில் ஈடுபட சுபாஷ் சந்திரபோஸ் தலைமையிலான ரவுடி கும்பல் திட்டமிட்டு வந்ததாகவும், அந்த நேரத்தில் இந்த என்கவுண்டர் நடந்திருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த என்கவுண்ட்டர் நடவடிக்கையில் காவல்துறையினர் 2 பேர் காயமடைந்தனர். அவர்கள் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதுரையில் ரவுடி என்கவுண்டர் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
என்கவுண்டர் எப்படி நடந்தது?
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மதுரை மாநகர காவல்துறை ஆணையர் லோகநாதன், "சமீபத்தில் நடந்த ரௌடி கொலையிலும் சம்பந்தப்பட்ட நபர் இவன். இன்று போலீசார் மறித்தபோது காரை நிறுத்தாமல் சென்றுள்ளான். அரிவாளால் 2 போலீசாரை வெட்டியுள்ளான்.
அவன் ஒரு துப்பாக்கியால் போலீஸ் காரை சுட்டுள்ளான். போலீசார் தற்காப்பிற்காகத்தான் சுபாஷ் சந்திர போஸை சுட்டனர். ரவுடி சுபாஸ் சந்திரபோஸின் கால்களுக்கு தான் குறி வைக்கப்பட்டது. அந்த நேரத்தில் அவர் குனிந்து விட்டார். இதனால் அவர் மீது குண்டும் பாய்ந்தது." என தெரிவித்தார்.
அண்மையில் மதுரை அருகே ஒரு என்கவுண்டர் நடந்தது. உசிலம்பட்டி கள்ளப்பட்டியை சேர்ந்த காவலர் முத்துக்குமார், மார்ச் 28ஆம் தேதி கஞ்சா விற்பனை கும்பலைச் சேர்ந்தவர்களுக்கு அறிவுரை கூறியபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவர் அடித்துக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
தொடரும் என்கவுண்டர்கள்
காவலர் முத்துகுமாரை கல்லால் அடித்து கொலை செய்தது கஞ்சா வியாபாரி பொன்வண்ணன் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து கொலை வழக்கில் பொன்வண்ணனை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். அவர் தேனி மாவட்டம் கம்பம் வனப்பகுதியில் இருப்பதாக வந்த தகவலை அடுத்து அவரை கைது செய்ய போலீசார் அங்கு சென்றனர்.
அப்போது போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற கஞ்சா வியாபாரி பொன்வண்ணனை துப்பாக்கியால் சுட்டதில் பலியானார். தமிழ்நாட்டில் இதுபோன்று பல குற்ற வழக்குகளில் ரவுடிகள் தொடர்ந்து என்கவுன்ட்டர் செய்யப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications