3 மாதத்துக்கு பின் மதுரை மாநகராட்சி கூட்டம்! 15 நிமிடத்தில் முடிந்த பட்ஜெட் கூட்டம்! பரபர நிகழ்வுகள்
மதுரை: மதுரை மாநகராட்சியில் சொத்து வரி முறைகேடு புகாரையடுத்து மேயர் இந்திராணியின் கணவர் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து மேயர் ராஜினாமா செய்த நிலையில், 3 மாதத்திற்கு பின் பொறுப்பு மேயர் தலைமையில் மதுரை மாநகராட்சி பட்ஜெட் மாமன்ற கூட்டம் நடந்தது. ஆனால், கூட்டம் தொடங்கி 15 நிமிடத்திற்குள் முடிவடைந்தது.
மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள வணிக கட்டிடங்கள் நிறுவனங்கள், மண்டபங்கள், விடுதிகள், மருத்துவமனைகள் மற்றும் வீடுகளுக்கான சொத்து வரி வசூல் தொடர்பாக
2022 முதல் 2024 ஜூலை 31 வரையிலான காலக்கட்டத்தில் ஆய்வு நடத்தியபோது அதிகாரிகளின் பாஸ்வேர்டுகளை முறைகேடாக பயன்படுத்தி வரி முறைகேடு செய்தது ஆய்வில் தெரியவந்தது.
இந்த வழக்கானது மத்திய குற்ற பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த முறைகேடு எதிரொலியாக மதுரை மாநகராட்சி மண்டல தலைவர்கள் மற்றும் நகரமைப்பு குழு, வரிவிதிப்பு குழு தலைவர்கள் ஆகிய 7 பேர் தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர்.

இதையடுத்து மாநகராட்சி வரி முறைகேடு வழக்கில் மேயரின் கணவர் பொன்.வசந்த், மாநகராட்சி வரிவிதிப்புகுழு தலைவர் விஜயலட்சுமியின் கணவர் கண்ணன், ஒப்பந்த ஊழியர்கள், உதவி ஆணையாளர் என மொத்தமாக 26 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்தும் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் கடந்த மூன்று மாதங்களாக மாமன்ற கூட்டம் நடைபெறாத நிலையில் மேயரும் நியமிக்கப்படவில்லை.
இதனிடையே சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தை நடத்த கோரி வழக்கு தொடரப்பட்ட நிலையில் அரசு தரப்பில் 10ஆம் தேதி மாமன்ற கூட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மூன்று மாதத்திற்கு பின்பு மதுரை மாநகராட்சியின் பட்ஜெட் மாமன்ற கூட்டம் இன்று மேயர் (பொறுப்பு) நாகராஜன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டம் தொடங்கியவுடன் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் முல்லைப்பெரியாறு கூட்டுகுடிநீர் திட்டத்தை அவசர அவசரமாக தொடங்கி வைத்தது கண்டித்து மாமன்ற கூட்டத்தில் முழக்கங்களை எழுப்பினர். அப்போது திமுக உறுப்பினர்களும் மாறி மாறி கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதையடுத்து மதுரை மாநகராட்சி 86ஆவது வார்டு பாஜக உறுப்பினர் பூமாஸ்ரீ தனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் 100 வார்டுகளின் குப்பைகளை கொட்டுவதால் இறைச்சிகளை உண்டுவிட்டு நாய்கள் கால்நடைகளை கடிப்பதால் மாநகராட்சி எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி மைதீன் பாய் என்பவருக்கு சொந்தமான பசுங்கன்றை நாய் கடித்து காயம் ஏற்படுத்தியது குறித்த புகைப்பட பேனரை கையில் காண்பித்தவாறு மாமன்ற கூட்ட அரங்கிற்குள் எடுத்து வந்து மாநகராட்சி கூட்ட மன்றத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது மாநகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக முழக்கம் எழுப்பியபோது கவுன்சிலர் பூமாஸ்ரீயுடன் திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு புகைப்படத்தை கிழித்தெறிந்ததனர். இதையடுத்து பாஜக கவுன்சிலர் பூமா ஸ்ரீ மாநகராட்சி அவை கவுன்சிலர்களால் வெளியேற்றப்பட்டார். இதனையடுத்து கூட்டம் தொடங்கிய 15 நிமிடத்திற்குள் பட்ஜெட் தொடர்பான விவாதம் இல்லாமல் 136 தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உபரி பட்ஜெட்டானது தாக்கல் செய்யப்பட்டது.
2026 -27 ஆம் நிதி ஆண்டுக்கான மொத்த வரவாக 1 கோடியே 45 லட்சத்தி 44 ஆயிரம் ரூபாயும், மொத்த செலவாக 1 கோடியே 45 லட்சத்தி 931 ரூபாயகவும் காண்பிக்கப்பட்டு -887 ரூபாய் உபரி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மூன்று மாதத்திற்கு பின்பு நடைபெற்று 15 நிமிடத்தில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்தக் கூட்டத்திற்கு வருகை தந்த ராஜினாமா செய்த மண்டல தலைவர்கள் கையெழுத்திட்டுவிட்டு கூட்டத்தில் பங்கேற்காமல் புறப்பட்டு சென்றனர்.












Click it and Unblock the Notifications